கணேசன், வனிதா தம்பதியரின் மூத்த மகன் அருண் ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்கு தேர்ச்சி அடைந்து விட்டான்.
ஆட்டோ ஓட்டும் கணேசனுக்கு, தனது மகனை நன்றாக படிக்க வைத்து அரசாங்க வேலைக்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணமே அவனுக்குள் இருந்துகொண்டிருந்தது.
ஏங்க...அருண் ஆறாம் வகுப்புக்கு போறான்ல...அவன இங்கிலீஷ் ஸ்கூல்ல சேர்த்துப் படிக்க வைப்போங்க....
வனிதா...நீ ஆசைப்படற மாதிரி இங்கிலீஷ் ஸ்கூல்ல சேர்க்கனும்னா நிறைய பணம் செலவாகும்னு உனக்குத் தெரியாதா? இல்ல... தெரியாமத்தான் பேசறியா? திடீர்னு இப்படி ஒரு ஆசை உனக்கு எப்படி வந்துச்சு?
நானே கூலிக்கு ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி கிட்டு வரேன்... தினசரி குடும்பத்தை ஓட்டுறதே பெரும்பாடா இருக்கு! இதுல அருணை இங்கிலீஷ் ஸ்கூல்ல எப்படி நம்மால படிக்க வைக்க முடியும்?
அதுக்கெல்லாம் நமக்கு வழியே இல்லை...
அருணை நல்லா படிக்க வச்சு, அவனை அரசாங்க வேலைக்கு அனுப்பனும்னு ஆசைப்பட்டா போதாதுங்க...! அவனுக்கு நல்லா இங்கிலீஷ் தெரியனும்... அதுக்குதான் சொல்றன்....அருணை இங்கிலீஷ் ஸ்கூல்ல சேர்த்துப் படிக்க வைக்கலாம்னு... நீங்கதான் முடியாதுன்னு சொல்றீங்க....!
வனிதா....சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்க.... முடியாதுன்னு நான் சொல்லல... அதுக்கான பணவசதி இல்லேன்னு தான் சொல்றேன்... அவன் இப்ப படிச்சுகிட்டு இருக்கற அரசாங்க பள்ளிக்கூடத்திலேயே அவன் படிக்கட்டும்.. அடுத்த வருசம் வேணா பார்க்கலாம்..
அப்பா.... அம்மா... நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்ததை நான் கேட்டுக் கிட்டு தான் இருந்தேன்....
எதுக்கும்மா.... என்னைத் தனியார் பள்ளியிலே சேர்க்கச் சொல்லி அப்பாகிட்ட வம்பு பண்ற....இப்ப நான் படிக்கிற அரசாங்க ஸ்கூல் நல்லாத்தான இருக்கு..... அங்க வேலை பார்க்கிற ஆசிரியருங்க எல்லாரும் நல்லாத்தானே பாடம் சொல்லித் தராங்க.... நானும் நல்லாத்தானே படிச்சு கிட்டு இருக்கேன்...அப்படி இருக்கறப்ப இப்ப எதுக்கு ஸ்கூல மாத்தணும்?
இல்லப்பா...நீ படிக்கிறது தமிழ் ஸ்கூலு....நீ நல்லா இங்கிலீஷ் படிக்கனுங்குற ஆசையிலதான் அங்க சேர்க்கனும்னு அப்பாகிட்ட பேசிட்டிருந்தேன்....
ஏம்மா....இப்ப நான் படிக்கிற ஸ்கூல்லதான் இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்கறாங்களே...
காலை, மதியம் இரண்டு வேளையும் நல்லா சத்தான உணவும் கொடுக்குறாங்க... நான்கூட அங்கதான சாப்பிட்டுகிட்டும் வரேன்...
இலவசப் பாடப்புத்தகம், இலவச சீருடை, இலவச மிதிவண்டி..ஏன் மிதியடி கூட இலவசமாத் தான் கொடுக்குறாங்க....
இப்படி எல்லாம் கொடுக்கற ஸ்கூல விட்டுட்டு, எதுக்கும்மா... தனியார் ஸ்கூலுக்கு போகனும்?
அங்க எல்லாத்துக்கும் பணம் தான் முக்கியமா தேவைங்குறது உனக்கு ஏன் தெரியாமப் போச்சு?
பேனா, பென்சில், பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம் எல்லாத்தையும் அவங்ககிட்டதான் பணம் கொடுத்து வாங்கனும்! யூனிபார்முக்கு காசு, தினசரி அவங்க வேன்ல போறதுக்கு பணம் கட்டணும்! இதுக்கெல்லாம் அப்பாகிட்ட பணம் இருக்கா?அப்பாவே ஆட்டோ ஓட்டி கிட்டு கஷ்டப்படறாரு....!
இதுல எப்படி அம்மா மாசா மாசம் ஸ்கூல் பீஸ் கட்டுவாரு....!
வனிதா...பார்த்தியா! நம்ம புள்ளை எப்படி பேசறான் பாரு! தான் படிக்கிற அரசாங்க பள்ளிக்கூடத்தைப் பத்தி நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கான்....நம்ப கஷ்டத்தையும் புரிஞ்சி வச்சிருக்கான்...
அம்மா! அது மட்டுமல்ல.... அரசாங்க பள்ளிக்கூடத்துல படிச்சா, காலேஜ் படிக்கிற வரைக்கும் உதவித் தொகை, இலவச பஸ் பாஸ் இப்படி எல்லாச் சலுகையும் கிடைக்கிறப்ப, அரசாங்க பள்ளிக்கூடத்தை விட்டுட்டு, நாம ஏன் தனியார் பள்ளிக்கூடத்துல சேர்ந்து காசு கொடுத்து படிக்கனும்? இங்கேயும் ஆசிரியர் தான் பாடம் சொல்லிக் கொடுக்கப் போறாரு!
அங்கேயும் ஆசிரியர் தான் பாடம் சொல்லித் தரப்போறாரு! பள்ளிக்கூடத்தை மாத்துனதுனால படிச்சிட முடியாது. நல்லா படிச்சு நாம முன்னேறம்னு நினைச்சா, மரத்தடி கீழே இருந்து கூட படிச்சிட முடியும்.
அரசாங்க பள்ளிக்கூடத்துல படிக்கிறவங்க, கலெக்டராவும், பெரிய பெரிய பதவியிலும் வந்துகிட்டுதான இருக்காங்க!
அதனால பணிரண்டாம் வகுப்பு வரை நான் அரசாங்க பள்ளிக்கூடத்துலதான் படிக்கப்போறன்...
அரசாங்க ஸ்கூல்ல படிச்சு நானும் அரசாங்க வேலைக்கு போய் சாதிச்சு க் காட்டத்தான்
போறேன்.....!
என்று சொல்லிய தன் மகன் அருணை
கணேசனும், வனிதாவும் ஆச்சரியமாக பார்த்து நின்றனர்.
ஆக்கம்:
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்.