tamilnadu epaper

சீனாவுக்கு அமெரிக்கா 104 சதவீத வரி: இந்தியாவிற்கான சீன தூதர் கடும் எதிர்ப்பு

சீனாவுக்கு அமெரிக்கா 104 சதவீத வரி:  இந்தியாவிற்கான சீன தூதர் கடும் எதிர்ப்பு

பீஜிங், ஏப். 9


''சீனப் பொருட்களுக்கு 104 சதவீத வரி என்ற அமெரிக்காவின் அறிவிப்பு, ஒருதலைப்பட்சமானது' என சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தெரிவித்தார்.


அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், கடந்த ஏப்ரல் 2ம் தேதி பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்காவுக்கு 34 சதவீத வரி விதித்தது. அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது.


இது தொடர்பாக, இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் வெளியிட்டுள்ள அறிக்கை: சீனாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை உறுதி செய்துள்ளது. சீனா உற்பத்தி துறையில் கவனம் செலுத்தி வருகிறது. சீனா உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுதோறும் சராசரியாக உலகளாவிய வளர்ச்சியில் 30 சதவீதம் பங்களிக்கிறது. உலக வர்த்தக அமைப்பை பாதுகாக்க உலகின் பிற பகுதிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.


சீனா இந்தியா பொருளாதார மற்றும் வர்த்தக உறவு சிறப்பாக இருக்கிறது. அமெரிக்கா வரிகளை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்கொள்வதால், சிரமங்களை சமாளிக்க உலகளாவிய நாடுகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.


சீனாவுக்கு ஆதரவாக இந்தியா இருக்க வேண்டும். வர்த்தக போரில் வெற்றியாளர்கள் கிடையாது. அமெரிக்காவின் நடவடிக்கை ஒருதலைப் பட்சமானது. இதனை கூட்டாக எதிர்க்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


உலக நாடுகள் கெஞ்சல்


அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக என்னை தொலைபேசியில் அழைக்கும் உலக நாட்டுத் தலைவர்கள் பலரும், ஒப்பந்தத்துக்காக உயிரை விடுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர், எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் இவ்வாறு கூறியுள்ளார்.