சென்னை:
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதலாக 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே காவல் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நிலையத்தில் 90-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கஞ்சா, குழந்தை கடத்தல், செல்போன், நகை திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல் சம்பவங்களில் ஈடுபடுவோரை விரைந்து பிடிக்க சிசிடிவி கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.
அந்த வகையில், மேலும் 100 கேமராக்களைப் பொருத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே நிர்வாகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டது. நடைமேடைகள், நுழைவுப் பகுதிகள், பார்சல் சர்வீஸ் வளாகம் மற்றும் அருகில் உள்ள புறநகர் மின்சார ரயில் நிலையத்தின் சில பகுதிகளையும் தேர்வு செய்து பட்டியல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 100 கேமராக்கள் பொருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த புதிய கேமராக்கள் பொருத்தி, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.