tamilnadu epaper

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாதம் 89லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில்  கடந்த மாதம் 89லட்சம் பேர் பயணம்


சென்னை, ஜூன் 3

சென்னையில் மெட்ரோ ரயில்களில் கடந்த மே மாதத்தில் 89 லட்சத்து 9 ஆயிரத்து 724 பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் சுமார் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.


   கடந்த மே மாதத்தில் 89 லட்சத்து 9 ஆயிரத்து 724 பேர் பயணம் செய்துள்ளனர். இதில்அதிகபட்சமாக மே 5-ம் தேதி அன்று 3 லட்சத்து 23 ஆயிரத்து 899 பேர் பயணம் செய்துள்ளனர். 

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில்,” மே மாதத்தில் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 42 லட்சத்து 33 ஆயிரத்து 865 பயணிகளும், பயண அட்டைகளை பயன்படுத்தி 5 லட்சத்து 86 ஆயிரத்து 430 பேரும், டோக்கன்களை பயன்படுத்தி 1,268 பேரும், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 40 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேரும், குழு பயணச்சீட்டு பயன்படுத்தி 169 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டை, வாட்ஸ்அப் டிக்கெட் உள்ளிட்ட பயணச்சீட்டுகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது” என்றனர்.