மான்செஸ்டர், மார்ச் 9
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில், புதிதாக இந்திய துணை துாதரகம் நேற்று திறக்கப்பட்டது.
நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். நேற்று அவர், பிரிட்டனின் மான்செஸ்டரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய துணை தூதரகத்தை திறந்து வைத்தார். அப்போது, பிரிட்டனுக்கான இந்தியாவின் புதிய துாதரக ஜெனரலாக விசாகா யதுவன்ஷி பொறுப்பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில், பிரிட்டன் துணை பிரதமர் ஏஞ்சலா ரெய்னர், இந்தோ- - பசிபிக் நாடுகளுக்கான பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கேதரின் வெஸ்ட் ஆகியோரும் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், “சர்வதேச மகளிர் தினத்தில் புதிய தூதரக ஜெனரலாக விசாக யதுவன்ஷி பொறுப்பேற்றது, மிகவும் பொருத்தமானது” என குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், “பிரிட்டனின் இந்த பகுதியில் அதிகரித்து வரும், புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான முக்கியத்துவத்தின் அடையாளமாகவும், இந்தியா -- பிரிட்டன் இடையிலான, தாராள வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட விஷயங்களின் அடையாளமாகவும் இந்த தூதரகம் அமைகிறது.
''இது வெறும் அலுவலகம் அல்ல; இரு தரப்பு உறவுக்கான பெரிய முதலீடு. இந்தியாவையும், மான்செஸ்டர் பிராந்தியத்தையும் மிக ஆழமாக இணைக்கும் காந்த சக்தியாக இந்த துாதரகம் இருக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.
இதையடுத்து, அங்குள்ள ஓல்டு டிராபோர்டு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரிட்ட ன்வாழ் இந்தியர்களை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
மேலும், பிரிட்டனில் உள்ள கவுன்டி அணியான லங்காஷைர் பெண்கள் கிரிக்கெட் அணியினரையும் அவர் சந்தித்தார்.