திண்டிவனம், மே 29-
மணமக்கள் மீது அரிசி போட்டு வாழ்த்தாமல் மலர்களைத் தூவி வாழ்த்துங்கள். இதனால் அரிசி வீணாவது தடுக்கப்படுகிறது என்று சிபிஎம் செயலாளர் சண்முகம் கூறினார்.
திண்டிவனத்தில் மா.கம்யூ. வட்ட செயலாளர்கண்ணதாசன்- சரிதா ஆகியோர் திருமணத்தை தலைமை தாங்கி, சடங்கு இல்லா திருமணமாக தாலியை எடுத்துக் கொடுத்து மாநில செயலாளர் சண்முகம் நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
இங்கு அக்னி கிடையாது, ஐயர் கிடையாது, மந்திரம் கிடையாது. மாலை மாற்றிக் கொண்டு,தாலி கட்டிக் கொண்டு இந்த திருமணம் சில நிமிடங்களில் நடந்து முடிந்திருக்கிறது என பலருக்கும் தோணும், இது மாதிரியான திருமணம் செல்லுபடி ஆகுமா, ஆகாதா என தோன்றலாம்.
திருமணம் செல்லும்
இது மாதிரியான சமூக சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படியாக செல்லும். தமிழகத்தில் இது மாதிரியான சீர்திருத்த திருமணங்கள் செல்லும் என்ற சட்டங்கள் பல்லாண்டு காலம் நடைமுறையில் இருந்தாலும் இது மாதிரி சீர்திருத்த திருமணங்கள் நடப்பது மிக மிக குறைவு. இது மாதிரி திருமணம் செய்து கொண்டவன் தான் நான். இது மாதிரி திருமணம் செய்த நாங்களும் குழந்தை குட்டிகள் பெற்று பேரன் பேத்திகள் எடுத்து நல்ல முறையில் தான் இருக்கிறோம்,
பூ போட்டு வாழ்த்து
இந்த திருமணத்தில் பூ போட்டு தான் வாழ்த்துகிறோம். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். நீண்ட காலமாக திருமணங்கள் அரிசியை போட்டு தான் வாழ்த்துவார்கள், வாழ்த்துகிறார்கள். மணமக்களை வாழ்த்துவதற்கான அடையாளமாக அரிசி இருக்கிறது.
வீணாகும்அரிசி
தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 50- ஆயிரம் கல்யாணம் நடக்கிறது, அதில் வாழ்த்துவதற்கு இரண்டு கிலோ அரிசி என்று வைத்துக் கொண்டாலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கிலோ அரிசி கீழே வீசி, காலில் மிதிபட்டு வீணாகிபோகிறது.
இது ஒரு நாள், இரண்டு நாள் மட்டும் அல்ல, வருடந்தோறும் நடைபெறும் திருமணங்களை யோசித்துப் பாருங்கள். ஒரு திருமணத்திற்கு இரண்டு கிலோ அரிசி என்றால் எத்தனை டன் அரிசி மணமக்களை வாழ்த்துகிறோம் என்ற பெயரில் கீழே வீசி வீணாக்கப்படுகிறது, நாம் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.
மணமக்கள் மீது மலர்களைப் போட்டாலும், அரிசியை போட்டாலும் வாழ்த்துக்கள் தான். ஆனால் மலர் கசங்கி சில நாட்களில் சருகாவிடும், ஆனால் அரிசி காலில் மிதிப்பட்டு அரிசி வீணாகிப் போகிறது. ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான டன் அரிசி வீணாகிப் போகிறது ஏற்றுக்கொள்ளவும் முடியாது, எந்த விதத்திலும் நியாயப்படுத்தவும் முடியாத நிகழ்வு,
ஆகையால் இனிமேல் திருமணம் செய்யக் கூடியவர்கள் பெற்றோர்களாக இருந்தாலும் சரி, இளைஞர்களாக இருந்தாலும் சரி வாழ்த்துகிறோம் என்ற பெயரில் இனி அரிசியை வீணாக்கும் காரியத்தை தயவு செய்து மேற்கொள்ளாதீர், மலர்கள் மூலமாகவே உங்கள் வாழ்த்துக்கள் மணமக்களுக்கு போய் சேரும் அப்படி ஒரு மாற்றத்தை ஒவ்வொரு குடும்பத்திலும் நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.