tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-03.06.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-03.06.25


  'சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? கூடாதா?' என்பது பலருக்கு குழப்பமான பெரிய சந்தேகமாக இருக்கிறது. இந்த நிலையில் சர்க்கரை நோயாளிகளில் யார், எவ்வளவு மாம்பழம் சாப்பிடலாம் என்பதையெல்லாம் தெளிவாக சொல்லியிருந்த விதம் சிறப்பு. இனி என்னைப்போன்ற சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது, அளவாக மாம்பழம் சாப்பிட்டு மகிழ்ச்சியடைவார்கள் என்பது நிச்சயம்.


  சாந்தி ஜொ எழுதிய 'எழுத்தாளர்கள் லோகம்' என்ற சிறுகதை முற்றிலும் வித்தியாசமான புதிய கற்பனை. மறைந்த எழுத்தாளர்கள் அகிலன், தகழி சிவசங்கரன் பிள்ளையுடன், முன்னாள் பிரதமர் விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல் கலாமும் உரையாடும் இந்த கதை வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. ஆனாலும் அவர்களெல்லாம் திரும்ப பிறந்து வந்து எழுதினாலும், இந்த செல்போன் மோகத்தை மக்களிடமிருந்து நிச்சயம் போக்கமுடியாது என்பதுதான் உண்மை!


  நிரஞ்சனாவின் 'யாதுமாகி நின்றவள்' தொடர் இந்த வாரம் ஒரே அன்புமழையாக இருந்தது. அதனால் உள்ளம் மகிழ்ச்சியில் குதூகலித்தது. இந்த சிறப்பான தொடரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.


  தி.வள்ளியின் 'ஸ்ரீராமரின் கல்யாண குணங்கள்' என்ற கட்டுரை ஸ்ரீராமரின் பெருமையை சிறப்பாக உணர்த்தியது. ஸ்ரீராமன் எல்லோராலும் கொண்டாடப்படுவதற்கு காரணம் அவன் கல்யாண குணங்களே.. ராமாயணம் கூறும் அறநெறிகளை பின்பற்றுவதைவிட மிகப்பெரிய வாழ்க்கை நெறி எதுவும் கிடையாது' என்ற இந்த கட்டுரையாசிரியையின் கருத்து மிகச் சரியானது.


  ஸ்டாலின் சீனிவாசன் வரலாறு சுதந்திரத்திற்கு முன்பு இருந்த இந்தியாவின் பத்திரிகை உலகத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டியது. நான் கூட ஸ்டாலின் சீனிவாசன் என்றவுடன் இவர் ஒரு கம்யூனிச பற்றாளர் போலிருக்கு என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். இந்த கு.சீனிவாசனுக்கு சோவியத்யூனியனின் கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலின் போன்ற மீசை இருந்ததால் இந்தப்பெயர் பெற்றார் என்பது சுவாரஷ்யமான தகவலாக இருந்தது.


  'பள்ளிக்கு வா தம்பி வா..!' என்ற ச.கிறிஸ்து ஞானவள்ளுவனின் சிறுவர் பாடல், விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு திரும்பும் மாணவ மாணவிகளின் குதூகலத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்தது.


  'நாட்டுப்பெண், மாட்டுப்பெண்' என்ற தகவல்கள் அட, அப்படியாயென்று வியப்பை தந்தது. லால்குடி வெ.நாராயணனின் இந்த தொகுப்பு அர்த்தங்கள் மிகுந்த அற்புதமான தொகுப்பு.


  ப.கோபிபச்சமுத்துவின் 'உப்பு-இறைவனை உணர்த்தும் ஓர் அடையாளம்' என்ற தகவல்கள், உணவில் அளவாக அறிந்துப்போட்ட உப்பு போல ஒரு தனிச்சுவையுடன் இருந்தது. உப்பையே இவர் சர்க்கரைப்போல இனிமையாக எழுதியிருக்கிறார் என்றால், அது கொஞ்சமும் மிகையல்ல!


  -சின்னஞ்சிறுகோபு,

   சிகாகோ.