tamilnadu epaper

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-03.06.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-03.06.25


உக்ரைன் நாட்டின் மீது ஒரே நேரத்தில் ரஷ்யா மிகக் கடுமையான தாக்குதல்களை போர் விமானங்கள் மூலமாகவும் ட்ரோன்கள் மூலமாகவும் நடத்தி பல உயிர்களை பலி வாங்கியது உலகின் பேசு பொருளாக இருந்து வந்தது.


அதற்கு பழிக்கு பழியாக

ரஷ்யா மீது ட்ரோன் மழை பொழிந்து பல போர் விமானங்களை பஸ்பமாக்கி இருக்கிறது உக்ரைன் . 


4700 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ரஷ்யாவின் விமான தளத்தை ட்ரோன்கள் மூலம்தாக்கியிருக்கிறது

உக்ரைன். அதற்காக ரகசியமாக ரஷ்ய எல்லை வரை சரக்கு லாரிகளில் ட்ரோன்களை ஏற்றி சென்று இருக்கிறார்கள்.


அமெரிக்காவில் இஸ்ரேலை ஆதரிக்கும் ஒரு பிரிவினர் நடத்திய பேரணியில் பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் கூட்டத்த்தினர் மேல் எரிபொருளை ஊற்றி தீ வைத்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. அதில் நான்கைந்து பேர்கள் தீயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.. 


இப்படி அமெரிக்காவில் இஸ்ரேலிய ஆதரவு மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இதற்கு காரணம் அந்த நாட்டில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் அபரிமிதமான ஜனநாயக உரிமைகளாகும்.


சீக்கிய படை பிரிவுக்கு அதிகாரியாக இருந்த

ஒருவர் அந்த படை பிரிவினர் கொண்டாடிய மத சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்ள மறுத்திருக்கிறார். தன்னுடைய மதத்தைத்தவிர

வேறு மதத்து விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அவர் கூறியதால் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 

அவரது பணி நீக்கத்தை நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது. 


மதத்துக்காக தான் வகித்து வந்த உயரிய பதவியையே

உதறித் தள்ளும் அளவுக்கு அவருக்கு மதப் பற்று இருந்திருக்கிறது. மனிதனுக்கு தான் சார்ந்த மதத்தின் மீது ஈடுபாடு இருக்கலாம். ஆனால் அது வெறியாக இருக்க கூடாது என்பதற்கு இந்த சம்பவம் சான்றாகும்.


மன்னிப்பு கேட்காவிட்டால் கமலஹாசனின் படங்கள் வெளியிடுவதை தடுப்போம்

என்று கர்நாடக அமைச்சர் பயமுறுத்துகிறார்.


 உண்மைக்கும் வரலாற்றுக்கும் மாறுபட்ட ஒரு கருத்தை வலியுறுத்தி கர்நாடக மக்களின் உணர்வுகளை உசுப்பி விட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற நினைக்கும் கட்சிகள் எப்படிப்பட்டவை என்பது நடுநிலையாளர்கள் நிச்சயம் உணர்ந்து கொள்வார்கள்.


மேற்கு வங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிரான தனது வெறுப்பு பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். பொறுப்பான அமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படி கீழே இறங்கி வந்து மோசமான வார்த்தைகளை பிரயோகம் செய்வது சரியா என்பதை அவரே யோசிக்க வேண்டும்.


இந்தியாவை ஆளும் கட்சியினர் பாகிஸ்தானுக்கு எதிராக நாடு நடத்திய தாக்குதலை மையமாக வைத்தே அதை வரப்போகும் தேர்தல்களில் தங்களது சாதனையாக பிரச்சாரம் செய்து ஐந்தாறு வருடங்களுக்கு  தேர்தல் களில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைப்பது போலிருக்கிறது.


சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாகிய ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 


ஒரு சில நிமிடங்கள் அனுபவிக்க போகும் சிற்றின்பத்துக்காக மனிதப் பிறவி எடுத்து உலகில் பல்லாண்டுகள் வாழப்போகும் வாய்ப்பையே இழந்து விட்டார் அவர். ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பது என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு கொடுமையானது என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. 


-வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்