அறிவியலால் ஆக்கம் செய்வோம்

அறிவியலால் ஆக்கம் செய்வோம்


-பாவலர் கருமலைத்தமிழாழன்


அறிவியலின் வளர்ச்சியாலே பெற்ற தென்ன

ஆராய்ந்து பார்த்தாலோ நன்மை யோடு

பறித்துகுழி நமக்குநாமே விழுதல் போன்று

பலவகையாய்த் தீமைகளும் வந்த திங்கே !

தறிகையால் நெய்ததுணி எந்தி ரத்தால்

தரம்மாறக் கைத்தறியோ வீழ்ந்த தின்று

பறித்துண்ட கனிதன்னைச் சாறாய் மாற்றிப்

பதப்படுத்திப் பருகியதால் கண்டோம் நோய்கள் !


மாட்டுவண்டிப் பயணமெல்லாம் பேருந் தாக

மாசாகிப் போனதுவே தூய காற்று

நாட்டிடையே நான்குவழிச் சாலை போட்டு

நட்டமரம் சாய்த்திட்டார் மழையோ போச்சு !

தீட்டிதிட்டம் கட்டுவித்த தொழிற்சா லையால்

தீக்கழிவு கலந்தாறு பாழ்ய்ப் போச்சு

ஊட்டமாக பயிர்வளர மருந்த டித்தே

ஊனமாகிப் போனார்கள் மனித ரெல்லாம் !


செயற்கைக்கோள் வானத்தில் பறக்க விட்டுச்

செத்தொழிய அணுக்குண்டை வெடிக்க வைத்தார்

இயற்கையாக வீசிவந்த காற்ற டைத்தே

இயந்திரத்தால் அறைகளினைச் குளிரச் செய்தார் !

இயங்குதற்கு விட்டமூச்சை மீண்டும் மீண்டும்

இழுக்கவைத்து உடலில்நோய் பெருக வைத்தார்

வியக்கவைக்கும் அறிவியலை ஆக்கத் திற்கு

வினையாற்றி வளங்களினை வளர்ப்போம் வாரீர் !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%