
முசாபர்நகர், ஜூலை 14
உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படை (STF), இன்று முசாபர்நகரில் நடத்திய அதிரடி என்கவுண்டரில், பிரபல தாதா சஞ்சீவ் ஜீவா கும்பலின் முக்கிய ஷார்ப்ஷூட்டரான ஷாரூக் பதான் என்பவரை சுட்டுக் கொன்றது.
உத்தரபிரதேசத்தின் மீரட்டில் இருந்து செயல்படும் சிறப்பு அதிரடிப் படை களப்பிரிவு, முசாபர்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஷாரூக் பதான் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு அதிரடிப் படை குழுவினர் பதானை சுற்றி வளைத்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில், ஷாரூக் பதான் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஷாரூக் பதான் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
முசாபர்நகரைச் சேர்ந்த ஷாரூக் பதான், மறைந்த தாதா-அரசியல்வாதி முக்தார் அன்சாரி மற்றும் பிரபல தாதா சஞ்சீவ் ஜீவா ஆகியோரின் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். இவரைப் பற்றி பேசிய சட்டம் மற்றும் ஒழுங்குக்கான கூடுதல் டிஜிபி மற்றும் சிறப்பு அதிரடிப் படை தலைவர் அமிதாப் யாஷ், "ஷாரூக் பதான் மீது கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட அரை டஜனுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன" என்று தெரிவித்தார். இவரை நீண்ட நாட்களாக சிறப்பு அதிரடிப் படை தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.
என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து, ஷாரூக் பதானின் உடமைகளில் இருந்து 3 கைத்துப்பாக்கிகளும், ஏராளமான உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?