ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூரில் இருந்து சபரிமலைக்கு நவ. 28 முதல் சிறப்பு பேருந்துகள்
Nov 25 2025
11
சென்னை: ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கரூரிலிருந்து சபரிமலைக்கு வரும் 28-ம் தேதி முதல்சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ரா.மோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களின்போது தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டும் கடந்த 16-ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள், குளிர்சாதனப் பேருந்து மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கரூர் பகுதியினர் பயன்பெறும் வகையில் அதிநவீன குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து வரும் 28-ம் தேதி முதல் ஜன. 16-ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு, சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழுவாகச் செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும்.
எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட தகவல்களுக்கு 94450 14424 மற்றும் 94450 14463 ஆகிய செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?