தமிழகத்தில் 9 நாளில் 78.09% சிறப்பு தீவிர திருத்தப்பணி கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன
Nov 15 2025
46
தமிழகத்தில் 9 நாளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக 78.09 சதவீத கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் கமிஷன் அறி வித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 4-ந் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் நாளில் இருந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை கொடுத்து வருகின்றனர்.
இந்தப் பணிகளுக்காக அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்களாக 2 லட்சத்து 11 ஆயிரத்து 445 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந் தேதி நிலவரப்படி மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு வழங்குவதற்காக அதே அளவில் கணக்கீட்டு படிவங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5 கோடியே 67 ஆயிரத்து 45 படிவங்கள், அதாவது 78.09 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாக இந்திய தேர்தல் கமிஷன் நேற்று தெரிவித்தது. அதாவது தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கிய 9 நாட்களில் முக்கால்வாசிக்கும் மேல் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில்...
இந்தியாவில் தற்போது 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 962 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் எஸ்.ஐ.ஆர். பணியாற்றி வருகின்றனர். 1,376 அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். கடந்த 12-ந் தேதி வரை அங்கு 9 லட்சத்து 50 ஆயிரத்து 449 கணக்கீட்டு படிவங்கள், அதாவது 93.04 சதவீத படிவங்கள், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோவாவில்...
கோவாவில் அதிகபட்சமாக 99.99 சதவீத படிவங்களும்,
குறைந்தபட்சமாக கேரளாவில் 49.55 சதவீத படிவங்களும் வழங்கப்பட்டுள்ளன. 12 மாநிலங்களையும் சேர்த்தால், மொத்தமுள்ள 50.99 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 72.66 சதவீத படிவங்களை அதாவது 37.05 கோடி படிவங்களை வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?