தாம்பரத்தில் ஆட்டோ ஸ்டாண்டில் மோதல்; ஓட்டுநர் கொலை: 5 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை
Oct 03 2025
12

தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த குறிஞ்சி நகர், வி.ஜி.என். குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு காலி இடத்தில் தலை, முகம், கைகளில் பலத்த வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தாம்பரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
இளைஞரின் உடலை மீட்டு தாம்பரத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அருகே நின்றிருந்த ஆட்டோவை சோதனை செய்ததில் அதில் ரத்தக்கரை இருந்தது தெரிந்தது. தொடர் விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர், குரோம்பேட்டை, துர்கா நகரை சேர்ந்த வினோத்குமார் என்கிற ஆத்தா வினோத் (28) என்பது தெரியவந்தது.
ஆட்டோ ஓட்டுநரான இவர் மீது, சங்கர் நகர், குரோம்பேட்டை, தாம்பரம் காவல் நிலையங்களில் அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது வினோத்தை பம்மல் நாகல்கேணி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 5 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் கடத்தி வந்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும், வினோத் சமீபத்தில் புதியதாக ஆட்டோ வாங்கி தாம்பரத்தில் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ஸ்டாண்டில் போட்டு ஓட்டி வந்துள்ளார்.
ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்த வேண்டும் என்றால் சங்கத்துக்கு டெபாசிட் கட்ட வேண்டும். சங்கம் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று நிர்வாகிகள் கூறியதாகவும் அதை வினோத் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறு, முன்விரோதமாக மாறி வினோத் கொலை செய்யப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தாம்பரம் போலீஸார் ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த 5 பேரை விசாரிக்கின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?