திருவண்ணாமலை மாவட்டத்தில் வெறி நாய்க்கடிகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
Oct 09 2025
10

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெறி நாய்க்கடியால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன, இந்த ஆண்டு மட்டும் சுமார் 10479 நபர்கள் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டு, அதில் 3 நபர்கள் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
வெறி நோய் (ரேபிஸ்) என்பது வைரசினால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஓர் உயிர்க் கொல்லி நோயாகும்.
நாய் கடித்த முதல் நாள் முதல் 20 வருடங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் வெறி நோய் (ரேபிஸ்) வெளிப்படலாம்.
நாய் கடித்தால் பதட்டம் அடையக்கூடாது. கடித்த இடத்தை சுத்ததமான தண்ணீர், சோப்பு போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்றாகக் கழுவவும்,இது நாயின் வாயிலிருந்து பரவும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை நீக்க உதவும்.
நாய் கடித்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனை சென்று நாய்க்கடி தடுப்பூசி கட்டாயமாக போட்டுக் கொள்ள வேண்டும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் நாய்க்கடி தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்தடுப்பூசியானது 4 தவணைகளாக நாய் கடித்த முதல் நாள், 3 ஆம் நாள், 7 ஆம் நாள் மற்றும் 28 ஆம் நாள் செலுத்தப்படுகிறது.
நாய்க்கடித்த நபர் நாய்க்கடி தடுப்பூசியினை கட்டாயம் 4 தவணைகளும் செலுத்திக் கொள்ளவேண்டும். தவறினால் வெறி நோய் (ரேபிஸ்) பாதிப்பினை தடுக்க முடியாது.
வீட்டில் வளர்க்கும் நாய் அல்லது தெரு நாய் அல்லது வேறு விலங்குகள் கடித்தாலோ அல்லது ஆழமான நகக்கீறல் பட்டாலோ உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளவேண்டும்.
எனவே, பொது மக்கள் வீட்டில் வளர்க்கும் நாய் அல்லது தெரு நாய் கடித்தால் கவனக்குறைவாக இல்லாமல் மேற்கண்ட மருத்துவ அறிவுரைகளை பின்பற்றுமாறும், வெறிநாய் பாதிப்பு ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?