நீலாங்கரை பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 17.5 லட்சம் மோசடி: பெண் கைது
Sep 22 2025
37

சென்னை, செப். 20–
நீலாங்கரை பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 17.5 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, மயிலாப்பூர், நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த திவ்யா என்பவர் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்துக் கொண்டு பள்ளி ஆசிரியராக வேலை செய்து வருவதாகவும், கடந்த 2019ம் ஆண்டு, தான் நீலாங்கரையில் வசித்து வந்தபோது, கொட்டிவாக்கம் குப்பத்தைச் சேர்ந்த அபினாஷ் அவரது மனைவி செல்வி ஆகியோர் நடத்திய மாத ஏலச்சீட்டில் ரூ.4 இலட்சத்திற்கான சீட்டில் சேர்ந்து, மாதந்தோறும் பணம் செலுத்தி வந்ததாகவும், பின்னர் ரூ.5 லட்சத்திற்கான ஏலச்சீட்டிலும் சேர்ந்து பணம் செலுத்தி வந்ததாகவும், இந்நிலையில், அபினாஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் 2020ம் ஆண்டு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், விரையில் கொடுத்துவிடுவதாகவும் கூறி, ரூ.3.5 இலட்சம் பணத்தை கடனாக பெற்றுச் சென்றதாகவும், பின்னர் 2021ம் ஆண்டு ஏலச்சீட்டு முதிர்வடைந்து பணம் கேட்டபோது, பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் 2022ம் ஆண்டு தனது 2 ஏலச்சீட்டுகளின் பணம் மற்றும் கடனாக பெற்ற பணம் ரூ.3.5 இலட்சம் ஆகியவற்றை கேட்டபோது, இருவரும் பணத்தை தரமுடியாது என மிரட்டி அனுப்பிய பின்னர் அபினாஷ் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் வீட்டை காலி செய்து தலைமறைவாகிவிட்டதாகவும், திவ்யா, நீலாங்கரை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அபினாஷ் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் புகார்தாரர் திவ்யா மற்றும் அப்பகுதியில் பல நபர்களிடம் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி பணம் பெற்றும், கடனாக பெற்றும் ரூ. 17.5 லட்சம் வரை அபகரித்துக் கொண்டு குடும்பத்துடன் தலைமறைவானதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட செல்வியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செல்வி விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அபினாஷ் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?