பாதிக்கப்பட்ட மாணவியை குறை சொல்வதா? - மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், 'பெண்கள் இரவில் கல்லூரியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது' என்று கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், ஒடிசாவைச் சேர்ந்த மாணவி (23) ஒருவர் 2-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது ஆண் நண்பருடன் மாலை வெளியே சென்று விட்டு இரவு 8.30-க்கு கல்லூரி விடுதிக்கு திரும்பினார். அப்போது ஒரு கும்பல் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியது. ஆண் நண்பரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “துர்காபூரில் மருத்துவ மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக போலீஸார் 3 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். அதே நேரத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு கல்லூரி வளாகத்தை விட்டு 23 வயது பெண் எப்படி வெளியில் வந்தார். இதற்கு யார் பொறுப்பு?.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு தண்டனை பெற்று தரப்படும். இந்த நேரத்தில் தனியார் கல்லூரிகள், தங்கள் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ‘இரவு நேர கலாச்சாரத்துக்கு’ முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, “ஒரு முதல்வராக இருந்தும் மம்தா பானர்ஜியின் இந்த கருத்து பெண்மையின் மீது ஒரு கறை. ஆர்.ஜி.கர் மற்றும் சந்தேஷ்காலி சம்பவத்துக்குப் பிறகு, இப்போது இந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு நீதிக்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவரை அவர் குறை கூறுகிறார்.” என்றார்.
மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார், “முன்னதாக, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தபோது, தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு குறைவான இரவு நேர வேலைகளை வழங்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போது முதல்வர் பெண்கள் இரவில் வெளியே செல்லக்கூடாது என்று கூறுகிறார். அனைத்து பெண்களும் பர்தா அணிந்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா?" என்று வினவினார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார், "மாலைக்குப் பிறகு, அதாவது ஒரு நாளைக்கு 12 மணி நேரம், ஒரு பெண் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட வேண்டும் என்று எப்படிச் சொல்ல முடியும்?. பெண்கள் மருத்துவமனைகள், ஐடி துறை மற்றும் எல்லா இடங்களிலும் ஆண்களைப் போலவே பெண்கள் வேலை செய்கிறார்கள். இன்றைய இந்தியப் பெண்கள் ஒலிம்பிக்கில் பளு தூக்குதலில் தங்கப் பதக்கங்களை வென்று வருகின்றனர். அவர்கள் விண்வெளிக்குச் செல்கிறார்கள், ஆனால் இரவு 9 அல்லது 8 மணிக்குப் பிறகு பெண்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.
பெண்களுக்கு பக்கபலமாக நின்று பெண்களை பாதுகாக்க சட்டங்களை உருவாக்குவது முதல்வரின் பொறுப்பு. ஆனால் இது போல முதல்வர் சொல்வது அபத்தமானது. பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற அவரது கூற்றை நான் ஆதரிக்க முடியாது... இது சரியல்ல" என்று அவர் மேலும் கூறினார்.