பிஹார் தொழிலாளிக்கு கை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்களுக்கு துணை முதல்வர் நேரில் பாராட்டு
Nov 30 2025
16
சென்னை: பிஹார் தொழிலாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக கையை பொருத்திய ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்களை நேரில் அழைத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார்.
பிஹாரைச் சேர்ந்த 28 வயது தொழிலாளி கடந்த செப்.26-ம் தேதி சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் அவரது இடது கை தோள்பட்டையிலிருந்து முழங்கை வரை மிக மோசமாக சிதைந்துபோனது. அதேபோல், வலது கை மணிக்கட்டு பகுதிவரை சிதைந்திருந்தது. இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு கைகளும் சிதைந்திருந்த நிலையில் அவருக்கு இடது கையில் மணிக்கட்டிலிருந்து கீழே உள்ள பகுதியை வலது கையோடு இணைத்து, கரங்களை மாற்றி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அந்த சிக்கலான, சவால் மிகுந்த அறுவை சிகிச்சையை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை தலைவர் பி.ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.
சிகிச்சையில் ரத்தக் குழாய் மறுசீரமைப்பு முடிந்தவுடனேயே இணைக்கப்பட்ட கை புத்துயிர் பெற்றது. இந்த சவால் மிகுந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்களை சென்னை முகாம் அலுவலகத்துக்கு அழைத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பாராட்டினார்.
இந்நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் சாந்தாராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “சென்னையில் பணியாற்றி வந்த பிஹார் தொழிலாளி எதிர்பாராதவிதமாக ரயில் விபத்தில் சிக்கி கைகளை இழந்த நிலையில், அவருக்கு, ராஜீவ்காந்தி மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து அவரின் இடது கையை வலது முழங்கையுடன் இணைத்து சாதனை படைத்துள்ளனர்.
மிக அரிதான கரங்களை மாற்றி பொருத்தும் அறுவை சிகிச்சை நமது நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்த அறுவை சிகிச்சையை திறமையாக செய்த மருத்துவர்களுக்கு பாராட்டுகள்” என்று தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?