
ஷிவானிக்கு ஆச்சரியமாக இருந்தது. பாலுவா இப்படிப் பேசுகிறான்!
'உன்னால் தான் இன்னிக்கு நல்ல நிலைமையில் இருக்கேன் . எங்க வீட்டுக்கு நீ வந்ததிலிருந்து எனக்கு ஏறுமுகம் தான் .நீ சொன்ன யோசனையின்படி அப்பாவோட தொழிலையே நானும் பண்ண ஆரம்பிச்சேன். இன்னைக்கு இந்த பிசினஸ்ல நான் நெம்பர் ஒன்னா இருக்கேன். அதுக்கெல்லாம் உன்னோட ராசி தான் காரணம்' என்றவன் இப்போ தலைகீழாக மாறிவிட்டானே" என்று மனதுக்குள்ளே அழுதாள் .
இருவருக்கும் திருமணமான இந்த ஒரு வருட காலத்தில் இப்போதுதான் பிரச்னையே ஆரம்பமானது .
டூவீலரில் சென்று கொண்டிருந்த பாலு விபத்துக்குள்ளாக
ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி
ஒரு மாதத்திற்குப் பிறகுதான் வீடு வந்து சேர்ந்தான்.
அதன் பிறகு அவனுடைய லாரி தொழிலும் சரிவைச் சந்திக்க அவனுடைய கோபம் எல்லாம் ஷிவானியின் பக்கம் திரும்பியது.
' எல்லாம் உன்னோட சூப்பரான ராசி .ஓஹோன்னு இருந்த நான் இன்னைக்கு எப்படி ஆயிட்டேன் .
இனிமேல் என் முகத்திலேயே விழிக்காதே! " என்று கோபமாய் கத்த பிரச்சனை ஆரம்பமானது. தினமும் அவனுடைய பேச்சுக்களைப் பொறுக்க முடியாத ஷிவானி தன் பிறந்த வீட்டுக்கு செல்வது என்று முடிவெடுத்தாள்.
தன் மாமியாரிடம் சென்று தன் முடிவை கூற "அவன்தான் அறிவு கெட்ட தனமா பண்றான்னா
நீயுமா? தொழில்ல லாப நஷ்டம் வருவது சகஜம். அதுக்கெல்லாம் ஒருத்தரை காரணம் காட்டி குறை சொல்றதெல்லாம் தப்பு . உன்னைப் பாராட்டிப் பேசும்போதெல்லாம் மகிழ்ச்சி அடையாமல் சாதாரணமாக இருக்கும் நீ அவன் உன்னை கோபிக்கும்போது மட்டும் கலங்கறியே. அவன் லாஜிக் படியே பார்த்தா கூட லாரிகளுக்கெல்லாம் அவன் பேரைத்தான் வச்சிருக்கான். அந்தப் பெயர் ராசியில்கூட இப்படி எல்லாம் நடக்கலாம் இல்லையா?
அவன் ஆஸ்பத்திரியில் இருந்தப்போ தொழில்ல கவனம் செலுத்தாமல் இருந்ததாலதான் இப்படி நடந்திருக்கு. கடினமான உழைப்பு தான் ஒருத்தரை உயர்த்தும் இந்த மாதிரி மூடநம்பிக்கைகள்
படுகுழியில் தான் தள்ளும் . நான் பார்த்துக்கிறேன். நீ இங்கேயே இரு" என்ற மாமியாரை கண்கள் பனிக்கப் பார்த்தாள் ஷிவானி.
மு.மதிவாணன்
குபேந்திரன் நகர்
அரூர் 636903
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?