ரிப்பன் மாளிகையில் மேயர், ஆணையரிடம் மனு கொடுக்க சென்ற தூய்மைப் பணியாளர்கள் கைது
Oct 13 2025
10

சென்னை: ரிப்பன் மாளிகையில் மேயர், ஆணையரிடம் மனு கொடுக்க சென்ற தூய்மை பணியாளர்களை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்ததை கண்டித்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஆக.1-ம் தேதி முதல் தொடர்ந்து 13 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
நீதிமன்ற உத்தரவால், நள்ளிரவில் இவர்கள் கைது செய்யப்பட்டு, குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 71 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தனியார் நிறுவனத்தின்கீழ் பணியில் சேராமல், தங்களை பழைய நிலையில் பணிபுரிய அனுமதிக்கும்படி கோரிக்கைவிடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கெனவே தூய்மைப் பணியாளர்கள் ராயபுரம், திருவிக நகர் மண்டலத்தைச் சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். தொடர்ந்து, ரிப்பன் மாளிகைக்கு சென்று மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் ஆகியோரிடம் மனு அளித்து தூய்மைப் பணியாளர்கள் நூதன போராட்டம் நடத்தப்போவதாக பெரியமேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று ஏராளமான போலீஸார் ரிப்பன் மாளிகை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட 3 பகுதிகளில் இருந்து பல பிரிவுகளாக தூய்மைப் பணியாளர்கள் நேற்று ரிப்பன் மாளிகை நோக்கி வந்தனர். அவர்களை ரயில் நிலையப் பகுதி அருகிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, ரிப்பன் மாளிகை முன்பு சட்டவிரோதமாக கூடியதாக தூய்மைப் பணியாளர்களை போலீஸார் கைது செய்து, பல்வேறு இடங்களில் உள்ள சமுதாக நல கூடங்களில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை போலீஸார் விடுவித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?