ரூ.824 கோடி மதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
Nov 22 2025
24
புதுடெல்லி: ரூ.824 கோடி மதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு (டிஎஸ்சிஏ) நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மொத்தம் ரூ.824 கோடி மதிப்பிலான வெளிநாட்டு (இந்தியா) ஆயுத விற்பனை தொடர்பான 2 திட்டங்களுக்கு வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இதில், ரூ.418 கோடி மதிப்பிலான எக்ஸ்காலிபர் ஏவுகணை மற்றும் ரூ.406 கோடி மதிப்பிலான ஈட்டி ஏவுகணை அமைப்பு ஆகியவை அடங்கும். இது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு இலக்குகளை ஆதரிக்கும்.
மேலும் அமெரிக்கா, இந்தியா இடையிலான ராஜதந்திர உறவை வலுப்படுத்தவும் இது உதவும். மேலும் இந்தோ-பசிபிக் மற்றும் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அரசியல் நிலைத்தன்மை, அமைதி, பொருளாதார முன்னேற்றத்துக்கான முக்கிய சக்தியாக திகழும் ஒரு முக்கிய கூட்டாளியின் (இந்தியா) பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும்.
இந்திய பாதுகாப்புத் துறைக்கு இது மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். குறிப்பாக, துல்லியமான தாக்குதல் திறன் கொண்ட உபகரணங்களை வழங்குவதன் மூலம் இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்கால பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் மேம்படும்.
மேலும் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தவும் இது உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த அக்டோபர் 31-ம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தை சந்தித்தார்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பான 10 ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக ரூ.824 கோடி மதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கி உள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?