தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த நேரம்.
ஜுனியர் விகடனில் வாரந்தோறும் வாசகர் கேள்விக்கு பதில் அளித்து கலக்கிக் கொண்டிருந்தார்.
மிகவும் சுவாரஸ்யமாக வும் விறு விறு பக்கமாகவும் இருந்தது.
ஜு.வி.வாங்கியதும் முதலில் சுஜாதா பதிவ்களைப் படிப்பதில் தான் மூளையும் இதயமும் சேர்ந்து பரபரக்கும் என்று நான் கூறுவதில்
சத்தியம் அடித்துச் சொல்கிறேன்... சிறிதும் மிகை கிடையாது. அந்த அளவுக்கு அது வேற லெவலாக ஜொலி ஜொலித்தது.
( இந்த தருணத்தில் தமிழ் நாடு இ பேப்பரின் மதிப்பு மிகு சீப் எடிட்டர் அவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:
தமிழ் நாடு இ பேப்பரில் வாசகர் கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கும் புத்தம் புது பகுதியைத் தொடங்கினால், கன ஜோராக இருக்கும் என்பது என் கருத்து மட்டுமல்ல, விருப்பமும் தான்...)
சரி, சுஜாதா மேட்டருக்கு வருவோம்.
அந்தக் காலக்கட்டத்தில் நடிகை குஷ்புவுக்கு
அமோக ரசிகர் பட்டாளம். கோவில் கட்டி கும்பிடும் அளவுக்கு நிலைமை
அத்து மீறிப் போனதை
அநேகர் மறந்திருக்க மாட்டார்கள்.
ஜுவியில் ஒரு வாசகர் இப்படி கேட்டிருந்தார்:
" ஒரு நாளில் குஷ்புவை ஒரு தடவை கூட நினையாமல் என்னால் இருக்க முடியலியே.."
அந்த வாசகரின் இந்த கேள்விக்கு, நீங்கள் யாருமே எதிர் பார்க்க முடியாத பதிலை எழுதி
சுஜாதா எல்லோரையும் சிலிர்க்க வைத்து விட்டார்.
அப்படி என்ன எழுதி விட்டார் என்று நீங்கள் அவசரப் படுவது புரிகிறது... புரிகிறது.
" நண்பரே! ஒரு தேனீயை மனக் கண்ணில் கொண்டு வாருங்கள்.
சின்னஞ் சிறு உருவ அமைப்பு கொண்ட அந்தத் தேனீயின் மூளையின் அளவை நினைத்துப் பாருங்கள்.
இந்த மிக மிகக் குறைந்த அளவிலான மூளையை வைத்துக் கொண்டு தேனீ செய்கின்ற செயல்கள் என்னென்ன தெரியுமா?
ஒரு பூவைப் பார்த்த கணத்தில், அதில் உயர்தரமான தேன் உள்ளதா? சுமார் வகைத் தேன் உள்ளதா? ஆகக் குறைந்த தரமுள்ள தேன் தான் உள்ளதா?
என்று தெரிந்து கொள்கின்ற திறமை...
நல்ல வகைத் தேன் என்றால் ஓகே...
மோசமான தேன் என்றால் வேண்டாம் என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லி விட்டு, சிறந்த தேனுக்காக நீண்ட தூரம் பயணம் செய்கின்ற ஆற்றல்...
அவ்வாறு நீண்ட தூரம் பயணிக்கும் போது,
எதிரிகள் யாரும் சண்டை போட வந்தால்,
அவற்றை வலுவுடன் எதிர் கொள்ளும் ஆற்றல்... தரமான தேனை தேடிக் கண்டுபிடித்து
கூட்டில் கொண்டு போய் இசட் பிளஸ் பாதுகாப்புக்கு கொஞ்சமும் குறையாத பாதுகாப்போடு சேமித்து வைக்கும் ஆற்றல்...தன் கூட்டில் வசிப்போர் எண்ணிக்கை கூடி விட்டால், உடனடயாக தனிக் குடித்தனத்துக்கு தயாராகி விடும் ஆற்றல்... இப்படி இன்னும் சில ஆற்றல்களை சுட்டி பட்டியலில் இணைத்து விட்டு கேட்கிறார்...
நண்பரே! இத்தனை ஆற்றல்களும் நிறைந்த தேனீயின் மூளையை விட, உங்கள் மூளையின் அளவு எத்தனை மடங்கு பெரியது தெரியுமா?
பத்து மடங்கல்ல..
நூறு மடங்கல்ல...
ஆயிரம் மடங்கல்ல..
பத்தாயிரம் மடங்கல்ல..
லட்சம் மடங்கல்ல...
கோடி கோடி மடங்கு கூடுதல் சக்தியுள்ள மூளையைப் பெற்றுள்ள நீங்கள்,
ஒரு நாளில் ஒரு தடவை கூட குஷ்பூவை நினையாமல் என்னால் இருக்க முடிய வில்லையே என்று கேட்கிறீர்களே...
வெட்கமாயில்லை..."
என்று முடித்திருப்பார் சுஜாதா!
இப்போது சொல்லுங்க...
அந்த வாசகர் கேட்ட கேள்விக்கு, இதை விட சிறப்பாக வேறு யாரால் இப்படி பதில் அளிக்க முடியும்?
மனித ஆற்றல் எல்லையில்லாதது என்பதை மீண்டும் நினைவுப் படுத்தவே
சுஜாதா மேட்டரை இங்கே பதிவு செய்ய விழைந்தேன்.
அன்பான வாசக சொந்தங்களே!
அளவு கடந்த ஆற்றலை ஆண்டவன்
நமக்கு தாராளமாக வழங்கி யிருக்கிறான்.
இந்த மகா ஆற்றலை வெற்றுக் காரியங்களில் நீர்த்துப் போக வைக்கலாமா?
தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசக சங்கமம் என்பது நமக்குக் கிடைத்த
நல் வாய்ப்பு.
இந்த அற்புதமான சந்தர்ப்பத்தை சக்தி மிக்கதாக மாற்றும் வல்லமை நமக்கு இயல்பாகவே இருக்கிறது என்று நினைத்தாலே நெஞ்சம் இனிக்கிறது.
அருள் தரும் தெய்வம் இதழின் வளர்ச்சிக்கு
நம் பங்களிப்பை உணரும் போது நாம் மனித மாண்பினைப் போற்றும் பண்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறோம்.
தொடர்ந்து ஒரு இயக்கம் மாதிரி இயங்குவோம்!
தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் தொடர் வெற்றிக்கு என்றென்றும் துணையாக இருப்போம்!
பி.சிவசங்கர்
கோவை