தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
கரூர் சம்பவம் தமிழகத்தையே நிலை குலையச் செய்திருக்கிறது.
மக்கள் மனதைக் கலங்க வைத்திருக்கிறது.
27.09.2025 அன்று இரவு என் நண்பர்கள் தொடர்ந்து இது சம்பந்தமாக அலைபேசியில் பேசிக் கொண்டே யிருந்தனர்.
அதிலும் ராஜபாளையம் நண்பர்
கண்ணீர் மல்க உருகி பேசியது, உள்ளம் நெகிழ வைத்தது உண்மை. அன்று இரவு சாப்பாட்டை வேண்டாம் என்று மறுதலித்து பட்டினி காத்து சோகத்தை கரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் நமது தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசக சொந்தங்களுக்கு நான் சொல்ல வரும் செய்தி என்ன வென்றால்...
இந்த மாதிரியான சமூக நிகழ்வுகளை
எதிர் கொள்ளும் போது, அவற்றை மன ரீதியாக எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுக் கொள்வது முக்கியம்.
என்னிடம் உரையாடிய ஐந்து நண்பர்களும்
சோகத்தை வெளிப்படுத்திய பாங்கு உண்மையான மனித நேயத்தின் வெளிப்பாடு என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.
இன்னும் சரியாக சொன்னால், அவர்களின் சமூக நலன் சார்ந்த அந்த உணர்வு மதிக்கத் தக்கது.
ஆனால் இன்னொரு பக்கத்தையும் சுட்டியே ஆக வேண்டும்.
சோகம் மிகுந்த அந்த சம்பவம் பற்றி, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிய வண்ணம் இருந்தார்களே தவிர
ஆக்கப்பூர்வமாக எதையும் வெளிப்படுத்த வில்லை என்பது கசப்பான உண்மை.
கசப்பான சோகம்.
குறைந்த பட்சம்,
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை புரிவோம் என்று சொல்லி இருந்தால் கூட ஆறுதலாக --
அர்த்தமாக இருந்திருக்கும்.
மற்றவர் சோகத்தைப் பார்த்து வெறுமனே உச்ச் கொட்டி பரிதாப உணர்வை வெளிப்படுத்துவது
சிம்பதி ( Sympathy)
இதைத் தான் பொதுவாக நாம் அனைவரும் செய்து வருகிறோம்.
இதைத் தாண்டிய அடுத்த படிநிலை ஒன்று உண்டு...
"அய்யோ..சாலை விபத்தில் தவறி
விழுந்து ரத்தக் காயங்களோடு போராடிக் கொண்டிருக்கிறானே
நாம் உடனே ஏதாவது செய்ய வேண்டுமே '
என்று பதை பதைத்து
நொடி தாமதியாமல் களத்தில் இறங்கி முதல் உதவி காரியத் தில் துணிந்து ஈடுபடுவது....
வெறும் கண்ணீர் வடித்து பாவம் பாவம் என்று வெற்றுக் கூச்சல் போடுவது சிம்பதி ( Sympathy)
என்றால், என் சக மனிதன் வேதனையில் துடிக்கிறான்... வேடிக்கை பார்க்கக் கூடாது...அவன் வேதனையை குறைக்க உடனடியாக வினை புரிய வேண்டும் என்று வேட்டியை மடித்துக்
கட்டி மட மடவென்று
அடுத்தக் கட்ட நடவடிக்கையில் உள்ளன்போடு ஈடுபடுவதற்கு பெயர்
எம்பதி ( Empathy)
இதில் வேதனைக்குரியது என்ன தெரியுமா?
நம்மில் பெரும்பாலோர் சிம்பதி காட்டுபவர்களாக இருக்கிறோம்.
எம்பதி காட்டும்
இதயம் கனிந்த செயல் வீரர்களாக இல்லை என்பது தான்...
தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசக சொந்தங்கள் அனைவரும் எதையும் சீராய் சிந்திக்கும் வல்லமை பெற்றவர்கள்.
நமது தலைமை ஆசிரியர் அவர்கள்
நம்மை அந்த அளவுக்கு செதுக்கி செதுக்கி வளப் படுத்தி வருகிறார்.
இதையெல்லாம் புரிந்து சமூகத்துக்கு
வெளிச்சம் அளிக்கும்
காரிய சித்தியில்
தெளிந்து துணிந்து இறங்கி, தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை நிரம்ப இருக்கிறது.
வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்
P.Venkatachalapathy
Tenkasi