சென்னை, செப். 15-
தமிழகத்தில் கூட்டணியை வீழ்த்தி ஆட்சி மாற்றம் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு விஜய் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது; கூட்டத்தை வைத்து கூறினார்.
விசிக தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதன் விவரம்-
• திமுக வாக்குறுதிகள் தொடர்பாக தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி இருக்கிறாரே?
திமுக எதிர்ப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என விஜய் கருதுகிறார். திமுக மீதான விமர்சனங்களுக்கு உரிய நேரத்தில் அவர்கள் பதில் தெரிவிப்பார்கள்.
விஜய் வரவால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிடும் என்ற மாயதோற்றத்தை சிலர் உருவாக்குகின்றனர். திமுக தனித்து ஆட்சியை நடத்தவில்லை. கூட்டணி பலத்துடன் ஆட்சியில் இருக்கிறது. அந்த கூட்டணி வலுவாக, கட்டுப்பாடுடன் இயங்கி வருகிறது. எனவே, மதசார்பற்ற கூட்டணியை வீழ்த்தி ஆட்சி மாற்றம் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது." என்றார்.
மாற்றம் வராது
கூட்டத்தை வைத்து ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது எல்லாருக்கும் பொருந்தும். அண்மையில் விசிக மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தால் ஆட்சி மாற்றத்தை விசிக ஏற்படுத்துமா? என விவாதம் நடக்கவில்லை. திருமாவளவன் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? மாற்றத்தை ஏற்படுத்துவாரா என விவாதிக்கவில்லை. விஜய் ஒரு நடிகர் என்பதை வைத்துகொண்டு பெரிய மாற்றம் நிகழபோவது போன்று தோற்றத்தை உருவாக்குகின்றனர்.
இதையும் படிங்க: வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் வாக்கு? திருச்சியில் விஜய் கேள்வி!
திமுக, விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு வரக்கூடிய லட்சக்கணக்கானோர் கொள்கை கோட்பாடுடன் இருப்பவர்கள். நீண்டகாலமாக அரசியலில் மக்களுடன் நிற்பவர்கள். அந்த பெரும் திரளுக்கும், விஜய்க்கு திரண்டு வந்துள்ள கூட்டத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன. இந்த மக்கள் திரளை மட்டுமே ஒரு பொருட்டாக எடுத்துகொண்டு ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த போகிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க நினைக்கின்றனர்.
திமுக குறித்து மட்டுமே விஜய் பேசி வருவது திட்டமிட்ட அஜெண்டவிற்காக களம் இறங்கியுள்ளார் என்ற தோற்றத்தை உருவாகிறது. விஜய் திட்டமிட்டு களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளாரா? என்ற கேள்வி எழுகிறது.
கமல்ஹாசன் திமுக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறார். அவர் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது அவர் பார்த்த அரசியல் வேறு. ஆனால், அரசியலில் தலைவராக உருவானபோது அரசியலை அணுகும் முறையில் கொள்கை சார்ந்த மாற்றம் ஏற்பட்டது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.