வெனிசுலாவில் அடுத்தடுத்து 7 வெடிப்புச் சம்பவங்கள்: தாக்குதலை தொடங்கியதா அமெரிக்கா?

வெனிசுலாவில் அடுத்தடுத்து 7 வெடிப்புச் சம்பவங்கள்: தாக்குதலை தொடங்கியதா அமெரிக்கா?


 

கராகஸ்: வெனிசுலா தலைநகர் கராகஸில் இன்று (ஜன.3) அதிகாலை 7 இடங்களில் அடுத்தடுத்து வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவை வெனிசுலா ராணுவ தளங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. பயங்கர சத்தத்துடன் கரும்புகை கிளம்பியதால் பொதுமக்கள் அச்சமடைந்ததாகத் தகவல்கள் வருகின்றன. மேலும், அப்பகுதியில் விமானம் ஒன்று தாழப் பறந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அது போர் விமானமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


ஆனால், இந்த வெடிப்புச் சம்பவங்களுக்கு காரணம் என்னவென்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதலுக்கு ஆயத்தமாகி வருவதாக சொல்லப்பட்ட நிலையில், இந்தத் தாக்குதலை அமெரிக்காவே நடத்தியிருக்கலாம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கணிக்கின்றன.


இருப்பினும், வெனிசுலா தலைநகரில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவங்கள் குறித்து அந்நாட்டு ராணுவமோ அல்லது அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனோ எதுவும் சொல்லவில்லை.


ட்ரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து... - முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவை பதவி விலகுமாறு பலமுறை எச்சரித்து வந்தார். அமெரிக்காவுக்குள் ஃபெண்டானில் போதைப் பொருள் ஊடுருவ வெனிசுலா அதிபரே காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகிறார். அமெரிக்கா மீது வெனிசுலா ‘போதைப் பொருள் பயங்கரவாதம்’ நிகழ்த்துவதாகக் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலாவுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்ததோடு, அதன் கடற்பரப்புக்குள் எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்தையும் முடக்கிவைத்துள்ளார்.


கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் ரோந்து, கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபடுவதோடு, சில போர்க் கப்பல்களும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.


இத்தகைய சூழலில் இன்று காலை நிகழ்ந்துள்ள வெடிப்புச் சம்பவங்கள் அனைத்தும் அமெரிக்கா மீதான சந்தேகத்தை வலுக்கச் செய்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இத்தனைக்கும், நேற்று வெனிசுலா அரசு அமெரிக்கா முன்வைக்கும் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான ஆலோசனைக்கு தயாராக இருப்பதாகவும், அதன் அடிப்படையில் ஒப்பந்தத்தை எட்ட விரும்புவதாகவும் கூட பகிரங்கமாக அறிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.




விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி... வீதிகளில் திரண்ட மக்கள் - ஈரானில் நடப்பது என்ன?

உச்ச தலைவர் கமேனிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

 

கடந்த 2022-ம் ஆண்டு இலங்கையில் மக்கள் போராட்டம் ஒன்று வெடித்ததை மறந்திருக்க முடியாது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் வெகுண்டெழுந்து அதிபர் மாளிகையை சூறையாடி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.


மிக எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், அதேபோன்றதொரு நிலவரம் தான் இப்போது ஈரானில் நிலவுகிறது. ஆனால் ஈரானின் அரசியல் களமும், அதற்கு இத்தகைய நெருக்கடி ஏற்பட்ட பின்னணியில் இருக்கும் உள்நாட்டு மற்றும் புறக் காரணிகளும் மிக முக்கியமானவை.


ஈரான் கமேனிக்குப் பின்... - மேற்கு ஆசிய நாடான ஈரானின் அரசியல் வரலாற்றை அயோதுல்லா அலி கமேனிக்கு முன் கமேனிக்கு பின் என்று பிரித்துக் கொள்ளலாம். கமேனி, 1939-ம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ஜாவேத் கமேனி ஒரு மதகுரு.


1960 முதல் 70 வரை ஈரானில் இருந்த ஆட்சியை திரைமறைவில் இருந்து அமெரிக்கா இயக்கிக் கொண்டிருந்தது எனலாம். ஷா வம்சத்தினரின் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது. ஈரான் மேற்கத்திய கலாச்சாரத் தன்மையில் மூழ்க ஆரம்பித்திருந்தது.


அப்போது அயோதுல்லா கமேனி, ஈரான் மேற்கத்திய கலாச்சார மயமாக்கலுக்கு உள்ளாவதற்கு எதிராக போராடும் குழுக்களுடன் இணைந்து போராடி வந்தார். ருஹொல்லா கொமேனியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். புரட்சியில் ஆட்சியாளர்களை ஸ்தம்பிக்க வைத்ததால், ஷா ஆட்சியின் ரகசிய போலீஸாரால் கமேனி கைதும் செய்யப்பட்டார்.


தொடர்ந்து ஷா குடும்பத்தினர், ஈரானில் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளின் தலையீட்டால் பொருளாதார ஏற்றம் வரும் என காத்திருந்தனர். ஆனால், ஈரான் எண்ணெய் வளம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதே தவிர, அங்கு எந்த செழிப்பும் ஏற்படவில்லை. அப்போதுதான் ஈரான் மதகுருக்கள், அறிவுஜீவிகள், மாணவர்கள் இணைந்து ஒரு புரட்சியை நடத்தினர். அதன் விளைவாக 1979-ல் ஷா ஆட்சி அதிகாரம் தூக்கி வீசப்பட்டது.


ஈரான் ஓர் இஸ்லாமிய குடியரசு ஆனது. இஸ்லாமிய புரட்சிகர கவுன்சிலின் உறுப்பினரானார் கமேனி. முகமது அலி ரஜாயி ஈரான் அதிபரானார். ஆனால், ஒரு குண்டு வீச்சு நிகழ்வில் முகமது அலி கொல்லப்படவே, 1982-ல் ஈரான் அதிபரானார் கமேனி. 1989-ல் ஈரானின் உச்ச தலைவரானார். அன்று தொட்டு இன்று வரை அவர் தான் ஈரானின் உச்ச தலைவராக இருக்கிறார்.


ஒரு சிறந்த கவிஞர், கவிதை ரசிகர். அவருடைய அவையில் எப்போதும் அரசைப் புகழ்ந்துபாடும் கவிராயர்கள் சூழ்ந்திருப்பர். இன்னும் அவர் அப்படித்தான் இருக்கிறார், இருந்தாலும் அவரே அனைத்து அதிகாரங்களையும் வைத்திருக்கும் உச்ச தலைவர்.


புரட்சிக்குப் பின்னரும் கூட ஈரான் அமைதியாக இல்லை. அண்டை நாடான ஈராக் உடன் 1980 முதல் 88 வரை போர் செய்தது. அதை புனிதப் போர் என்று அழைத்தது.


ஈரானை எத்தகைய போர் சூழல் வந்தாலும் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது கமேனியின் நிலையான குறிக்கோள். அதனைச் சுற்றியே ஈரானின் எல்லா செயல்பாடுகளும் இன்றளவும் கட்டமைக்கப்படுகின்றன.


இஸ்லாமிய சட்டப்படி நடக்கும் ஆட்சியில் கமேனிக்கு நாட்டின் அரசு, நீதித் துறை, ஊடகம் என அனைத்தின் மீதும் வானளாவிய அதிகாரம் உண்டு. இந்த ஏகபோக அதிகாரம்தான் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்கின்றனர் தற்போது களத்தில் போராடும் மக்களும், இளைஞர்களும்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%