வெனிசுலா அதிபரை கைது செய்து நாடு கடத்திவிட்டோம்: ட்ரம்ப் அறிவிப்பு
Jan 04 2026
13
வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலா மீது அமெரிக்கப் படைகள் இன்று மிகப் பெரிய தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்திய பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து சமூக ஊடகத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “வெனிசுலா மற்றும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் மதுரோவும், அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்’ என அறிவித்தார்.
மதுரோ கைது செய்யப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்த நிலையில், “வெனிசுலா மீது அமெரிக்கா ஒரு மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதால், அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் இருப்பிடம் குறித்து தகவல் தெரியவில்லை” என்று வெனிசுலா துணை அதிபர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை அதிகாலையில் நடந்த தொடர் தாக்குதல்களில் குடியிருப்புப் பகுதிகளை அமெரிக்கா தாக்கியதாக வெனிசுலா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த வெனிசுலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ லோபஸ், "அமெரிக்கப் படைகள் எங்கள் மண்ணை அவமதித்துள்ளன.
போர் ஹெலிகாப்டர்களிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி, வெனிசுலாவில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றுள்ளன. எங்கள் பாதுகாப்புக்காக அனைத்து தரை, வான், கடற்படை மற்றும் ஏவுகணைத் திறன்களை பயன்படுத்துவோம்” என்றார்.
மதுரோவைக் கைது செய்ததாக ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, "வெனிசுலாவுக்கு ஒரு புதிய விடியல். கொடுங்கோலன் போய்விட்டார். இப்போது அவர் இறுதியாக தனது குற்றங்களுக்காக நீதியை எதிர்கொள்வார்" என்று அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ் தெரிவித்தார்.
முன்னதாக, இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் ஏழு குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன. மேலும் தாழ்வாகப் பறந்தபடி விமானங்கள் நகரைச் சுற்றி வந்தன. இதனையடுத்து அமெரிக்கா பொதுமக்களின் வசிப்பிடங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மடுரோ அரசாங்கம் குற்றம் சாட்டியது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?