tamilnadu epaper

உப்பை ஏன் கடனாக கொடுக்க கூடாது? மற்றும் உப்பு மந்திரத்தின் சக்தி

உப்பை ஏன் கடனாக கொடுக்க கூடாது? மற்றும் உப்பு மந்திரத்தின் சக்தி

 

 

உப்பு சமையலில் மட்டுமல்ல, ஆன்மிக ரீதியாகவும் மிகவும் முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. செல்வத்திற்கு அதிபதியாக விளங்கக் கூடிய மகாலட்சுமிக்கு இனிப்பு மிகவும் பிடித்தமான உணவு என்பார்கள். அதனால் தான் மகாலட்சுமி வழிபாட்டின் போது இனிப்பு பதார்த்தங்கள் அதிகம் நைவேத்தியமாக படைக்கப்படும். இனிப்பு மட்டுமின்றி, உப்பும் மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான ஒன்று. உப்பினை மகாலட்சுமியின் அம்சமாக கருதும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளது.

 

மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள் என குறிப்பிடும் பொருட்களில், வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய பொருட்களிலும் உப்பிற்கு முக்கியமான இடம் உண்டு. உப்பிற்கு தீய சக்திகளை விரட்டி, நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் தன்மை அதிகம் உண்டு என அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

*மகாலட்சுமிக்கு பிரியமான உப்பு :*

உப்பினை சிந்தக் கூடாது, உப்பு காலில் பட கூடாது, உப்பை கடனான கொடுக்கக் கூடாது என வீடுகளில் சொல்வதுண்டு. உப்பினை இரவல் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது என்பார்கள்.

 

அதே சமயம் கிரகப்பிரவேஷம் போன்ற சுப காரியங்கள் செய்யும் போதும் சரி, வீட்டில் திருஷ்டி கழிப்பதாக இருந்தாலும், கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதாக இருந்தாலும் சரி உப்பினை முக்கிய பொருளாக பயன்படுத்துவார்கள். இந்துக்களின் நம்பிக்கைபடி உப்பு, மங்கலகரமான பொருளாக பார்க்கப்படுகிறது.

 

*உப்பு கடன் கொடுக்க கூடாது :*

உப்பு, மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியவள் என்பதால், அதே கடலில் தோன்றும் உப்பும், சங்கும் மகாலட்சுமியின் அம்சமாக கருதி வணங்கப்படுகின்றன. ஒரு வீடு செல்வ செழிப்புடன் இருக்க மகாலட்சுமியின் அருள் வேண்டும். அதனால் தான் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும் என்பதற்காக கிரகபிரவேசத்தின் போது உப்பு வாங்கி கொடுக்கப்படுகிறது. மகாலட்சுமியின் அம்சமான உப்பினை இரவலாக கொடுத்தால், வீட்டில் உள்ள லட்சுமி கடாட்சம் போய் விடும் என்ற நம்பிக்கை காரணமாகவே உப்பினை கடனாக கொடுக்க கூடாது என சொல்வதுண்டு.

 

*உப்பின் ஆற்றல் :*

உப்பிற்கு எதிர்மறை சக்தி அழித்து, நேர்மறை சக்திகளை ஈர்க்கும் தன்மை உண்டு. அதனால் தான் வீட்டில் கண் திருஷ்டி, தீயசக்திகளின் நடமாட்டம் இருந்தால், ஒரு பாத்திரத்தில் உப்பு கலந்த நீரை வீட்டில் 3 நாட்கள் வைத்திருந்து, பிறகு கால் படாத இடத்தில் கொட்டி விடும் வழக்கம் உள்ளது. கோவில்களிலும் பரு, அம்மை நோய் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டவர்கள் அம்மன் கோவில்களில் உப்பு வாங்கி காணிக்கையாக செலுத்தும் வழக்கம் உள்ளது. இதே போல் எதிரிகளால் அதிக தொல்லைகளை அனுபவிப்பவர்கள், உப்பும் மிளகும் கலந்து, பலிபீடத்தின் மீது போடுவார்கள். இவ்வாறு செய்வதால் எதிரிகள் பலம் இழந்து போவார்கள் என்பது நம்பிக்கை.

 

*உப்பு வைத்து பிரார்த்தனை :*

பிரம்ம முகூர்த்த வேளையில் இரு கைகளிலும் கல் உப்பை வைத்துக் கொண்டு, கிழக்கு நோக்கி அமர்ந்து, "ஸ்மரம் யோ நிம் லக்ஷ்மீம்" என்ற ஆதிசங்கரர் அருளிய செளபாக்கிய மந்திரத்தை 16 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி 48 நாட்கள் தொடர்ந்து செய்து, அந்த உப்பை சேகரித்து வைக்க வேண்டும். 48 நாட்களுக்கு பிறகு மொத்த உப்பினையும், ஓடும் நீரில் கரைத்து விட வேண்டும். நீர் நிலைகளில் கரைக்க வாய்ப்பு இல்லாதவர்கள், மரத்தின் அடிப்பகுதியில் இந்த உப்பினை கரைத்து விடலாம். இவ்வாறு செய்வதால் தண்ணீரில் உப்பு கரைவதை போல் நமது கஷ்டங்களும் கரைந்து போகும் என்பது நம்பிக்கை. செல்வ வளமும் பெருகும்.

 

மகாலட்சுமியின் அருளை பெற :

மகாலட்சுமியின் அருள் வேண்டி, உப்பினைக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனைக்கு வடமொழியில் லவணம் என்று பெயர். பிரம்ம முகூர்த்த வேளையிலேயே இந்த லவண பூஜையை செய்ய வேண்டும். "ஓம் க்ருணி சூர்ய ஆதித்யோம் : மம செளக்யம் தேகிமே ஸதா" என்ற மந்திரத்தை உப்பினை கையில் வைத்துக் கொண்டு, சூரியனை பார்த்து வணங்க வேண்டும். இதனால் நோய்கள், கஷ்டங்கள் இல்லாத, ஒளிமயமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

 

இதே போல் அதிகாலையில் கையில் உப்பினை வைத்துக் கொண்டு, என்ன வேண்டுதலோ அதை நினைத்து 10 நிமிடங்கள் மனதிற்குள்ளாகவோ அல்லது வாய்விட்டோ பிரார்த்தனை செய்ய வேண்டும். என்ன வேண்டுதல் வைக்கிறோமோ அது நிறைவேறி விட்டதாகவோ அல்லது கண்டிப்பாக விரைவில் நிறைவேறி விடும் என நினைத்து தியானம் செய்ய வேண்டும். பிறகு அந்த உப்பினை நீரில் கரைத்து விட வேண்டும். இவ்வாறு முழு நம்பிக்கையுடன் செய்தால் நமது வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடம் உண்டு.

 

எம் அசோக்ராஜா __________

அரவக்குறிச்சிப்பட்டி ______

திருச்சி __620015____________