திருப்பாவை பாடல்கள்
திருப்பாவை பாடல் - 01
(மங்கையர்களை துயில் எழுப்புதல்)
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!
பொருள் :
இனிதே துவங்கி இருக்கின்ற மார்கழி மாதத்தில் முழு நிலவு ஒளி வீச துவங்கிவிட்டது. பல வளங்கள் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் எழில்மிகு மங்கையர்களே! வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்களை சூடிய கன்னியர்களே! எழுந்திருங்கள்.
நம்மை பாதுகாக்கும் அரிய தொழிலை செய்பவரும், கரங்களில் கூரிய வேலினை ஏந்திய நந்தகோபன் மற்றும் அழகிய விழிகளை உடைய யசோதா பிராட்டியாரின் வீரம் நிறைந்த சிங்கம் போன்ற கம்பீரமான தோற்றம் கொண்ட அவர்களுடைய புதல்வனும், கார்முகில் நிறங்களை உடையவனும், சேய் நிற விழிகளை கொண்டவனும், ஆதவனை போன்ற பிரகாசமான ஒளிகளை உடைய திருமுகத்திற்கு சொந்தக்காரரும் மற்றும் நாராயணனின் அம்சமுமாக இருக்கக்கூடிய கண்ணபிரான் நமக்கு அருள்புரிவதற்காக காத்து கொண்டிருக்கிறார். அவரை போற்றி புகழ்ந்தால் இவ்வையோர் யாவும் நம்மை வாழ்த்தும்.
திருப்பாவை பாடல் 02
(வையத்து வாழ்வீர்காள்)
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!
பொருள் :
பாவை நோன்பு மேற்கொள்பவர்களுக்கு ஆண்டாள் இப்பாடலில் சில கோட்பாடுகளை கூறுகின்றாள். நோன்பு மேற்கொள்ளும் பொழுது நாம் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்களை பற்றியும், செய்ய வேண்டிய செயல்பாடுகளை பற்றியும் இப்பாடலில் தெரிவிக்கின்றாள்.
இந்த உலக மாயையில் இருந்து விடுபட்டு பரந்தாமனின் உலகத்தை அடைய நாம் மேற்கொள்ளும் இந்த பாவை நோன்புகளில் முதலில் அதிகாலையில் எழுந்து நீராடுவதும், பரமனின் நாமங்களை பாடுவதும், நெய் உண்ணாமல் பால் அருந்தாமல், விழிகளிலே மை இட்டு அழகுபடுத்தி கொள்ளாமல், கூந்தல்களில் மலர்களை சூடாமல் மற்றவர்களை பற்றி புறம் பேசுவதோ, குறை கூறுவதோ இன்றி இயன்ற அளவிற்கு ஏழை எளிய மக்களுக்கு தான, தர்மம் செய்ய வேண்டும்.
திருப்பாவை பாடல் - 03
(வாமன அவதாரத்தை எடுத்துரைத்தல்)
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!
பொருள் :
சிறுவனாக சென்று, மகாபலி மன்னனிடம் மூன்றடி மண்ணை பெற்று, பின்பு விஸ்வரூபம் எடுத்து, மூன்று உலகங்களையும் தன்னுடைய திருப்பாதங்களால் அளந்த ஓங்கி உலகளந்த உத்தமனான வாமன அவதாரத்தை பற்றி இப்பாசுரத்தில் எடுத்துரைக்கின்றாள் ஆண்டாள்.
பரமனை பற்றி போற்றி பாடி அதிகாலையில் எழுந்து நீராடி இவ்விரதத்தை இருப்பதினால் வையகத்தில் தீமைகள் எதுவும் நேராமல் மாதம் மும்முறை மழை பெய்து நீர் இல்லாத இன்னல்களை குறைக்கும் என்றும், அதனால் வயல்வெளிகளில் நெல்மணிகள் நன்முறையில் வளரும் என்றும், மீன்கள் வயலுக்குள் ஊடுருவி துள்ளிக்குதித்து மகிழும் என்றும், குவளை மலர்களில் தேன் பருக வந்த வண்டுகள் அளவுக்கு அதிகமான தேனை பருகி தன்னிலை மறந்து கிறங்கி கிடக்கும் என்றும், இல்லை என்று கூறாமல் பால் சுரக்கும் பசுக்கள் வற்றாத பாலையும், செல்வத்தையும் அளிக்கும் என்றும் கூறுகின்றாள் ஆண்டாள்.
திருப்பாவை பாடல் - 04
(மழையால் மகிழ்ந்து நீராடல்)
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
பொருள் :
மேகத்திற்கு அதிபதியாக இருக்கின்ற பர்ஜன்ய தேவனே, கடலில் இருந்து உற்பத்தியாகும் எங்கள் மழையாகிய தெய்வமே, நீ சிறிதும் எங்கள் விருப்பங்களை மறுக்காது நிறைவேற்றுவாயாக...
கடலில் புகுந்து அனைத்து நீரையும் முகர்ந்து எடுத்துக்கொண்டு மேலே சென்று ஊழி முதல்வனான எங்களின் கண்ணனின் உருவத்தைப் போல் உருவம் கறுத்து வலிமைமிக்க தோள்களை உடையவரும், நாபி கமலத்திற்கு உரியவரின் கரங்களில் இருக்கும் பிரகாசமான ஒளியை கொண்ட சக்கரத்தைப் போல் மின்னலை உருவாக்கியும், அவரிடம் இருக்கும் வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியினை எழுப்பியும்... இன்றளவும் வெற்றியை மட்டும் நிலைநாட்டிக் கொண்டிருக்கும் சார்ங்கம் உலகளந்த பெருமானின் கரங்களில் வெளிப்படும் அம்புகளின் தொகுதியைப் போல் உலகத்தவர் செழிப்புடன் வாழ.. நீ மழை பெய்ய செய்வாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம் என்று எண்ணி நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராட போகிறோம் என்கின்றாள் ஆண்டாள்.
திருப்பாவை பாடல் - 05
(கண்ணனை புகழ்ந்து பாடுதல்)
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!
பொருள் :
மாயக்கலையில் வல்லவனாகவும், நிலைப்பெற்ற வடமதுரையில் பிறந்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரை கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேட்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிற்றை கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனுமான எங்கள் கண்ணனை காண நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் புறப்படுவோம்.
அவனை மனதில் நிறுத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல் காணாமல் போய்விடும்.
திருப்பாவை பாடல் - 06
(பல்வகை ஒலிகள்)
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்ல எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!
பொருள் :
வானம் வெளுத்து ஆதவன் தோன்றி பறவைகள் எல்லாம் எழுந்து மாறி மாறி ஒலிக்க துவங்கிவிட்டன. கருடனுக்கு அரசனான பெருமாளின் திருக்கோவிலில் வெண்சங்கு முழங்கும் ஓசை உன் செவிகளில் விழவில்லையா?
வஞ்சக எண்ணத்தினால் தன்னை மாய்க்க வந்த பேய் உருவமான பூதகி என்ற அரக்கியின் நஞ்சு கலந்த முலைப்பாலை உண்டு அவளை சாய்த்தவனும், சூழ்ச்சி எண்ணங்களால் கஞ்சன் அனுப்பிய சகடாசுரனை தனது திருவடிகளால் எட்டி உதைத்து மாய்த்த மாதவனாகிய பரந்தாமன் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார்.
இவ்வுலகில் அனைத்திற்கும் வித்தாக இருக்கக்கூடிய பரமனை மனதில் எண்ணிய வண்ணம் முனிவர்களும், யோகிகளும் மெல்ல எழுந்து 'ஹரி ஹரி" என்று ஓதுகின்றாரே! அந்த பேரொலி உனக்கு கேட்கவில்லையா? எங்கள் மனதை குளிர செய்யும் வழியை நீயும் கேட்டு குளிர்வாயாக! சிறுபிள்ளையாய் இருக்காதே எழுந்து வா...!!
திருப்பாவை பாடல் - 07
(கதவை திறக்க)
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்!
பொருள் :
ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன் குருவிகள் கீச்... கீச் என்று தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒலி உனக்கு கேட்கவில்லையா?
ஆயர்பாடியில் வாழும் ஆய்ச்சிகள், கண்ணன் உறக்கத்தில் இருந்து எழுந்துவிட்டால் தம்மை எந்தவொரு வேலையும் செய்ய விடாமல், தம் மீது சாய்ந்து சாய்ந்து கையை பிடித்து தடுத்து தயிர் கடைவதை தடுத்து விடுவானே என்று எண்ணி, அவன் எழுவதற்கு முன்பாக தயிரை கடைந்து விடுவோம் என்று தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்துக்காக பாற்கடலை வேகமாகவும், விரைவாகவும் எப்படி கடைந்தார்களோ? அவ்விதத்திலே வேகமாக கடைவதால் அவர்கள் அணிந்திருக்கும் அச்சுத்தாலி, ஆமைத்தாலி போன்ற ஆபரணங்கள் ஒன்றோடொன்று மோதி எழுப்பும் ஓசையும் உமக்கு கேட்கவில்லையா?
இவ்வளவு ஒலிகள் கேட்டும் எவ்விதத்தில் நீ உறக்கம் கொள்கிறாயோ? பேய்த்தனம் ஏதோ உன்னை பிடித்து கொண்டதோ? நீ நாயக பெண் பிள்ளையாயிற்றே! நாங்கள் கேசவனை பாட பாட நீ கேட்டுக்கொண்டே சுகமாக படுத்திருக்கலாமா?
ஒளி பொருந்திய முகத்தை உடைய பெண்ணே! உடனே எழுந்து கதவை திறந்து பாவை நோன்பு நோக்க வாராய்...!! என ஆண்டாள் தன் தோழியரை மட்டுமின்றி எல்லா பெண்களையும் அழைக்கின்றாள்.
திருப்பாவை பாடல் - 08
(இறையருள்)
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!
பொருள் :
கருமையான கிழக்கு வானமானது வெளுத்து விட்டது. எதிலும் நிதானமாகவும், மந்தமாகவும் நடக்கும் எருமைகள் கூட எழுந்து புல் நிறைந்த மேய்ச்சல் நிலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. அழகிய பெண்ணே! நீ துயில் கொண்டிருப்பது முறையா?
நீ எங்களுடன் வரவேண்டும் என்பதற்காக மற்றவர்களையும் தடுத்து நிறுத்தி உன்னை அழைத்து செல்லலாம் என்று வந்து நிற்கின்றோம். அவர்களின் மனதை கடுக்க வைக்காமல் வேகமாய் துயில் எழுந்து வா...!
தன்னுடைய தாய்மாமனான கம்சன் ஏவிய, பல அசுரனின் வாயை பிளந்து கொன்று, பல துர்ச்செயல்கள் செய்து வந்த வீரர்களையும் துவம்சம் செய்தவன் கண்ணபிரான்.
தேவர்களுக்கு முதற்கடவுளான நாராயணனின் புகழை பாடியபடி கோவிலுக்கு சென்று வழிபடுவோம். அவ்வாறு வழிபட்டால் நம் குறைகளை ஆராய்ந்து, நமக்கு அருள் தருவான் பெண்ணே! உடனே கிளம்பு!! என்று கூறி தோழியை துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.
திருப்பாவை பாடல் - 09
(நாமம் நவில்வோம் எனல்)
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!
விளக்கம் :
எழிலும், தூய்மையும் கொண்ட மணிகளால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிலும் விளக்குகள் பிரகாசமாக ஒளிவிட, நறுமணம் நிறைந்த சந்தன தூபம் கமழ, கண்டவுடன் அதில் படுத்து உறங்கும் சிந்தனையை உருவாக்கும் அழகிய மென்மையான பஞ்சு மெத்தையில் துயில் கொண்டிருக்கும் எங்கள் மாமன் மகளே! மணிகள் யாவும் நிறைந்த உன் வீட்டின் மணிக்கதவை திறப்பாயாக...
எங்கள் அன்பு மாமியே! உன் மகளை எழுப்புவாயாக... நாங்கள் பல மணிநேரமாக கூவி அழைக்கின்றோம். அவள் எதுவும் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? அவளை உடனே எழுப்புங்கள்! அந்த மாதவனின் பெருமைகளையும், வைகுந்தனின் நாமத்தையும், அந்த நாராயணனின் திருநாமங்களையும் சொல்லி பயன் பெறுவோமாக! என்று எழுப்புகின்றாள் ஆண்டாள்.
திருப்பாவை பாடல் - 10
(பதில் உரைப்பாயா தோழி)
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!
விளக்கம் :
சென்ற பிறவியில் நாராயணனை எண்ணி விரதம் இருந்ததன் பயனாக இப்பிறவியில் சொர்க்கத்தில் இருப்பது போன்று சுகம் பெற்று கொண்டிருக்கும் அம்மையே! மாற்றம் ஏதும் வேண்டாமோ?
இல்லத்தின் வாயிலை திறக்கவில்லை என்றாலும் பரவாயில்லை... பதில் உரைக்க மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால், அவன் நாம் மேற்கொள்ளும் விரதத்திற்கு ஏற்ற பலனை உடனே தருவான்.
நாராயணனின் ராம அவதாரத்தில் தூக்கத்திற்கு உதாரணமாக சொல்லக்கூடிய கும்பகர்ணனை தோற்கடித்தது மட்டுமல்லாமல், அவனது தூக்கத்தையும் உனக்கே அளித்து விட்டார்களோ?
சோம்பல் உடையவளே! கிடைப்பதற்கு அரிய அணிகலன் போன்றவளே...!! தெளிவாக துயில் கலைத்து கதவை திறப்பாயாக! என்று அழைக்கின்றாள் ஆண்டாள்.
திருப்பாவை பாடல் - 11
(விழித்து எழுக)
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்!
விளக்கம் :
கன்றுகளை ஈன்று மிகுதியாக பால் சுரக்கும் பசுக்களிடமிருந்து பால் கறப்பவர்களும், பகைவர்களின் பலம் அழிய போர் செய்யும் இடையர்களின் குலத்தில் தோன்றிய தங்கக்கொடியை போன்ற எழில்மிகு தோற்றம் கொண்ட பெண்ணே!
புற்றிலிருந்து வெளிவந்து படமெடுக்கும் நாகத்தின் கழுத்துக்கு நிகரான மெல்லிடையும், கானகத்தில் இருக்கும் மயிலுக்கு நிகரான உருவத்தையும் கொண்டவளே விழித்தெழுந்து வருவாயாக!
நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லா தோழியர்களும், உன் வீட்டின் முற்றத்தில் வந்து நின்று கண்ணனை போற்றி பாடி கொண்டிருக்கின்றோம். அவன் துதியை கேட்டும் நீர் அசையாமலும், பேசாமலும் உறங்கி கொண்டிருக்கிறாயே செல்வமகளே!
நற்பலனை விடுத்து நீ எதற்காக உறங்கி கொண்டிருக்கின்றாய்... இதன் பொருள் யாதென்று உரைத்து தோழியை எழுப்புகின்றாள் ஆண்டாள்.
திருப்பாவை பாடல் - 12
(எழுக எனல்)
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!
விளக்கம் :
இளம் கன்றுகளின் கனைத்தலை கேட்டதும், அவற்றின் கனைத்தலின் பொருள் உணர்ந்து அதாவது, அவற்றின் பசியை எண்ணிய எருமைகள் தங்களின் மடியில் பால் வழிய அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பாலினால் வீட்டின் வாசலானது சேறாகின்றது. அத்தகைய எருமைகளுக்கு உரியவரான நற்செல்வனின் தங்கையே!
கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலின் முன்னால் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை அழிக்க ராம அவதாரம் எடுத்த மனதிற்கு பிடித்த பெருமானின் புகழை பாடி கொண்டிருக்கின்றோம்.
நீ இன்னும் வாய் திறவாமல் இருக்கின்றாயே. ஆயர்பாடியில் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன் பேருறக்கம்? இப்போதாவது எழுந்து எங்களுடன் இணைந்து கொள்வாயாக! என்கின்றாள் ஆண்டாள்.
திருப்பாவை பாடல் - 13
(தோழி எழுக)
புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்!
விளக்கம் :
பகாசுரன் என்னும் அரக்கன் கொக்கின் வடிவத்தில் வந்தான். அவனது வாய் அலகுகளை தனது கைகளால் பற்றி இரண்டாக கிழித்தெறிந்து அவனை வதம் செய்தார். கொடிய அரக்கனான ராவணனையும் வதம் செய்தார்.
இத்தகைய சிறப்புகளையும், பெருமைகளையும் உடைய நாராயணனின் புகழை பாடியபடியே நம் தோழியர் அனைவரும் பாவை விரதம் இருக்கும் களத்திற்கு சென்று விட்டனர்.
வானத்தில் விடிவெள்ளி தோன்ற, வியாழன் மறைய, பறவைகள் கீச்சிட்டு பாடி கொண்டிருக்கின்றன.
தாமரை மலர் போன்ற சிவந்த எழில்மிகு விழிகளை உடைய அழகியே! இவைகளை அறிந்தும் உடல் நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் குளிக்க வராமல் இன்னும் படுக்கையில் இருக்கின்றாயே!
பாவையே! இந்த நன்னாளில் தனித்து இருப்பதை விடுத்து எங்களுடன் நீராட வா!! என்று எழுப்புகின்றனர் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.
திருப்பாவை பாடல் - 14
(பரமனைப் பாடுவோம் எனல்)
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்!
விளக்கம் :
உங்கள் வீட்டின் பின்வாசலில் உள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து இதழ்கள் விரிந்துவிட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்துவிட்டன.
செங்கற்களை பொடி செய்தாற்போன்ற காவி உடையணிந்த, அழுக்கு படியாத வெண்பற்களை உடைய துறவிகள் கோவில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.
'நான் வந்து உங்களை எழுப்புவேன்" என்று கூறிய நீ, இன்னமும் உறங்கி கொண்டிருக்கின்றாய். வெட்கமில்லா நாவினை உடையவளே! எழுந்திரு... இன்னுமா தூங்கி கொண்டிருக்கின்றாய்?
பெண்ணே! சங்கும், சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களை உடையவனுமான கண்ணனை பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே! எழுந்து வாராய்! என்று எழுப்புகின்றார்கள்.
திருப்பாவை பாடல் - 15
(தோழிகளின் உரையாடல்கள்)
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்!
விளக்கம் :
இளமையான கிளியை போன்ற அழகிய பேச்சை உடைய பெண்ணே...! பொழுது விடிந்தும் இன்னும் உறங்கி கொண்டிருக்கின்றாயே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகின்றாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர்.
அப்போது அந்த தோழி, சினத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ விரைவில் வந்து விடுகிறேன், என்கிறாள்.
உடனே தோழிகள், பேச்சில் வல்லவள் ஆகிய உன் பேச்சை பற்றி நாங்கள் நன்கு அறிவோம். இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கின்றாயே, என்று சிடுசிடுத்தனர்.
அப்போது அவள், சரி... சரி... எனக்கு பேச தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப்போகின்றேன் என்கிறாள்.
அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள்.
அவளும் சண்டைக்காரி, பேச்சை விட மறுக்கிறாள். என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகின்றீர்களே! எல்லோரும் வந்துவிட்டார்களா? என்கிறாள். தோழிகள் அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப்பார். அனைவரும் வந்துவிட்டனர்.
கம்சனின் மாளிகையின் வாசலில் தன்னை அழிக்க காத்திருந்த குவலயாபீடம் எனும் யானையைக் கொன்றவனும், கம்சன், சாணூரன், முஷ்டிகன் ஆகிய பகைவர்களின் அகந்தையை அழித்தவனும், மாயச்செயல்கள் புரிந்து நம்மை ஆட்கொள்பவனும் ஆன கண்ணனின் புகழை பாட விரைவில் எழுந்து வருவாய் என்கின்றனர்.
திருப்பாவை பாடல் 16
(கதவை திறப்பாயாக)
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்!
விளக்கம் :
எங்களுடைய தலைவனாக இருக்கும் நந்தகோபனின் அரண்மனையைக் காவல் செய்பவனே! கொடிகள் கட்டப்பட்டு அழகாக விளங்கும் தோரண வாயிலை காப்பவனே! நெடுங்கதவை திறப்பாயாக...!!
மாயன் மணிவண்ணன், ஆயர்குல சிறுமியரான எங்களுக்கு நேற்றே ஒலியெழுப்பும் பறை தருவதாக சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம்.
அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லிவிடாமல், மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக!
திருப்பாவை பாடல் - 17
(கண்ணன் குடும்பத்தவரை எழுப்புதல்)
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்!
விளக்கம் :
ஆடைகளையும், அன்னத்தையும், குளிர்ந்த நீரையும் தானமாக தந்து அறம் செய்யும் தலைவரான நந்தகோபனே துயில் எழுக!
கொடியிடை கொண்ட பெண்களுக்கெல்லாம் முதன்மையானவளே... ஆயர் குலத்தை ஒளிவிடச் செய்யும் தலைவியான யசோதையே... நீயும் விழித்து எழுவாயாக!
வானத்தை ஊடுருவி கிழித்துக் கொண்டு தனது ஈரடியால் உலகை அளந்த தலைவனே துயில் எழுக...!
செம்மையான உனது பாதத்தில் பொற்கழலை அணிந்த செல்வனே பலராமா, நீயும் உன் தம்பி கண்ணனும் இனியும் உறங்க வேண்டாம், எழுந்திருப்பீர்களாக...!
திருப்பாவை பாடல் - 18
(நப்பின்னையை எழுப்புதல்)
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
விளக்கம் :
மதங்கொண்ட யானையின் வலிமையை உடையவரும், போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடாமல் வலிமையை உடையவரான நந்தகோபரின் மருமகளே... நப்பின்னையே மணம் வீசும் கூந்தலை உடையவளே... கதவைத் திற.
எல்லா இடங்களிலும் கோழிகள் கூவி அழைக்கின்றன. மாதவிக் கொடி படர்ந்த பந்தலின் மேல் குயில்கள் கூட்டமாக வந்து பலமுறை கூவுகின்றன.
கண்ணனோடு வந்து விளையாடி, வெற்றி பெற்ற கையிலே பந்தை வைத்துக்கொண்டிருப்பவளே! உன் கணவரின் புகழைப் பாட கையிலே அணிந்திருக்கும் வளையல்கள் ஒலிக்க மகிழ்ச்சியோடு வந்து கதவு திறப்பாயாக...!
திருப்பாவை பாடல் - 19
(கண்ணனை எழுப்பி அனுப்புக எனல்)
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்!
விளக்கம் :
மங்களகரமாக குத்து விளக்கு ஒளிவீச, யானை தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மேல், மென்மையான பஞ்சு மெத்தை விரித்திருக்க அதில் கொத்துக் கொத்தாக மலர்களை தலையில் சூடிய நப்பின்னையை அணைத்தபடி படுத்திருக்கும் பரந்த மார்பை உடையவனே! நீ எங்களுடன் பேசுவாயாக...
மை பூசிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை