மதுரை:
90 சதவீத நாடுகளின் ஆதரவை பயன்படுத்தி தீவிரவாதத்தை வேரோடு அறுக்கவேண்டும் என, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மதுரையில் வலியுறுத்தினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தரிசனம் செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏப்ரல் 22ல் காஷ்மீர் பஹல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் காஷ்மீரில் பயிற்சி பெற்றிருப்பது தெரிகிறது. மும்பை தாக்குதலிலும் ஈடுபட்ட தீவிரவாதிகள் மகாராஷ்டிராவில் பயிற்சி பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் காஸ்மீரில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்தியதாக கூறினர். இதைத்தொடர்ந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு மனைவி கண் முன்னே கணவரை சுட்டுக் கொன்றது போன்ற கொடூரம் அரங்கேறியது. தீவிரவாத நடவடிக்கை குறித்து உளவுத்துறை மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை, ராணுவத்தினர் இல்லை. சம்பவத்திற்கு பிறகு தீவிரவாதிகள் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என, பிரதமரும் அமைச்சர்களும் சொல்கின்றனர். தீவிரவாதக்கு எதிரான ஆளும் கட்சியின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்க இந்திய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எதிராக நிற்க வேண்டும்.
தாஜ்ஹோட்டல் சம்பவத்தின்போது இன்றைய பிரதமர் மோடி அன்றைக்கு குஜராத்தில் முதல்வராக இருந்தார். அன்றைக்கு மும்பையில் அன்றைய பிரதமர் விமர்சித்து பேசியிருந்தார். இன்றைக்கு பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தான் தெரிவிக்கிறோம். இன்றைக்கு 90 சதவீத நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருக்கின்றன. இவ்வாய்ப்பை பயன்படுத்தி தீவிரவாதத்தை வேரோடு அறுக்கவேண்டும். இதற்கு மோடியுடன் ஆதரவாக நிற்போம். அரசியல் செய்யமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.