tamilnadu epaper

பொங்கல் + உளுந்து

பொங்கல் + உளுந்து

 

நான் ரகு.

 

ஆன்லைன் மூலம் வரும் ஆர்டர்களுக்கான உணவுப் பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு போய் வீடு வீடாக டெலிவரி கொடுக்கும் பணி எனக்கு.

 

டெலிவரி கொடுப்பதற்காக பைக்கில் அவசர அவசரமாய் சென்று கொண்டிருந்த போது குறுக்கே வந்து தடுத்து நிறுத்தினார் ஒரு நபர்.

 

  "தம்பி நீங்க அந்த வீட்டில் உள்ள பெரியவருக்குத்தானே டெலிவரி கொடுக்கப் போறீங்க?"

 

 "ஆமாம்... அது ஒண்னுதான் பாக்கி இருக்கு மத்ததெல்லாம் முடிச்சாச்சு"

 

  "ஒரு வேலை செய்யுப்பா... அந்த பொட்டலத்தை என்கிட்ட கொடுத்திட்டு அதுக்கு பதிலா இதைக் கொண்டு போய்க் குடுப்பா"அவர் வேறொரு பெட்டலத்தை தர முறைத்தேன்.

 

பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவர் நீட்ட மனம் மாறினேன். உடனே என்னிடம் இருந்த பொட்டலத்தைத் தந்து விட்டு அவர் பொட்டலத்தையும் பணத்தையும் வாங்கி என் பேக்கினில் வைத்துக் கொண்டு. "சார்... இதனால எனக்கு ஒண்ணும் பிரச்சனை வந்துடாதே?" பயத்துடன் கேட்டேன்.

 

அவர் பதிலேதும் சொல்லாமல் புன்னகையுடன் நகர, நானும் பெரியவருக்கு டெலிவரி கொடுத்து விட்டுத் திரும்பினேன்.

 

வழியெங்கும் மன உறுத்தல். "ஒருவேளை அந்த ஆள் தனியாய் இருக்கும் அந்த பெரியவரை சாகடித்து விட்டு உள்ளே புகுந்து கொள்ளையடிக்கத் திட்டம் போட்டிருக்கானோ?.. கடவுளே கடைசியா டெலிவரி கொடுத்தது நான்தான்னு கண்டுபிடிச்சாங்கன்னா போலீஸ்காரங்க என்னை ரவுண்டு கட்டிடுவாங்களே"

 

நீண்ட யோசனைக்குப் பின், நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்ததை இன்ஸ்பெக்டரில் கூற இருவரும் உடனே கிளம்பினோம்.

 

நாங்கள் அந்த வீட்டை அடைந்து அதிரடியாக நுழைந்த போது ஹால் சோபாவில் அந்த பெரியவரும் என்னிடம் பொட்டலம் கொடுத்த நபரும் உட்கார்ந்திருக்க ஆடிப் போனேன்.

 

  "சார்... சார் இவன்தான் ....இவன்தான் சார் உணவுப் பொட்டலத்தை மாற்றி கொடுத்தவன்" கத்தலாய்ச் சொன்னேன்.

 

எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்து விட்டு பெரியவரும் அந்த ஆளும் சிரிக்க கோபமான இன்ஸ்பெக்டர், "ஸ்டாப் இட்" என்று கத்தினார்.

 

சட்டென்று இருவரும் அமைதியாக, அந்த நபர் சொன்னார், "சார் நான் வேற யாரும் இல்லை இதோ இந்த பெரியவரோட மகன்தான்... நான் இல்லாத நேரத்தில் இவர் பொங்கலும் உளுந்து வடையும் ஆர்டர் பண்ணி சாப்பிடறார் சார்!...ஏற்கனவே அவருக்கு ஹை பிளட் பிரஷர்... கொலஸ்ட்ரால்... இருக்கு... அதுகளைச் சாப்பிட்டா அவரோட ஹெல்த் ரொம்ப பாதிக்கும் சார் .... அதை தடுக்கத்தான் நான் இவர் ஆர்டர் செய்த பதார்த்தங்களை வாங்கிட்டு நான் கொண்டு வந்த கேழ்வரகு களியைக் கொடுத்தனுப்பினேன்"

 

இன்ஸ்பெக்டர் திரும்பி என்னை முறைத்து விட்டு, "அப்படின்னா யாராவது பணம் கொடுத்தா நீ இதே மாதிரி பொட்டலத்தை மாற்றிக் கொடுப்ப அப்படித்தானே?... ஸ்டேஷனுக்கு வா இன்னிக்கு உனக்கு லாடம் கட்டறேன்" சொல்லிவிட்டு அவர் செல்ல, நான் நடுங்கியபடியே அவர் பின்னால் சென்றேன்.

 

( முற்றும்)

 

 முகில் தினகரன், கோயம்புத்தூர்.