tamilnadu epaper

மதுரை வண்டியூர் மாரியம்மன்*

மதுரை வண்டியூர் மாரியம்மன்*

மதுரையின் கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வண்டியூர் மாரியம்மன் கோவில். மதுரையை ஆள்பவள் மீனாட்சி என்றால், மதுரையின் காவல் தெய்வம் வண்டியூர் மாரியம்மன்தான். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த விசேஷங்கள் நடத்தினாலும், முதலில் இவளிடம் உத்தரவு கேட்டுவிட்டு, அதன்பின்பே நடத்துகிறார்கள். மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் விழா நடக்கும் முன்பு, முதல் பூஜை இவளுக்கே செய்யப்படுகிறது.

 

ஆரம்ப காலத்தில், இவளை, 'துர்க்கை'யாக பாவித்து வணங்கினர். மதுரையை ஆட்சி செய்த மன்னர்கள், போருக்கு செல்லும் முன்பு வீரத்துடன் செயல்படவும், வெற்றி பெறவும் இவளை வணங்கியுள்ளனர். பிற்காலத்தில் நாட்டில் மழை பொய்த்தபோது, மன்னர்கள் இவளிடம் மழை வேண்டி பூஜைகள் செய்து வணங்கினர். மாரி தரும் தெய்வமாக வணங்கப்படுபவள் மாரியம்மன். துர்க்கையாக இருந்தாலும், மழை பெற வேண்டி வணங்கப்பட்டதால் இவளுக்கு, 'மாரியம்மன்' என்ற பெயரே நிலைத்து விட்டது.

 

இத்தலத்து அம்மன், துர்கையாகவும் மாரியம்மனாகவும் சேர்ந்தே தரிசனம் தருகிறார். கருவறையில், பிற அம்மன் கோவில்களில் இல்லாத விதமாக மாரியம்மன், தனது வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில், இடது காலை மகிஷாசுரன் தலைமேல் வைத்து உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் அருள்பாலிக்கிறாள். கையில் பாசம், அங்குசம் ஏந்தி அம்பாள் சிரித்த கோலத்தில், காட்சி தருகிறாள். பொதுவாக மாரியம்மனின் காலுக்கு கீழே அசுரன் உருவம் மட்டுமே இருக்கும். ஆனால், இவள் துர்க்கையின் அம்சமாக இருப்பதால் காலுக்கு கீழே, மகிஷாசுரன் இருக்கிறான். மூலவராக மாரியம்மன் இருப்பதால், வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது.

 

தேவியின் திருத்தலங்கள் தொடரும்...

 

கீதா ராஜா சென்னை