“யாரையாவது எதற்காகவாவது
குறை காணாது இருக்க முடியாதா ?”
என்கிறாள் மனைவி
“இது குறை காண்பதல்ல…
நிறைசெய்வதற்கான முறையான அடித்தளம்”-
என்கிறேன் நான்…
“நிறைதானே செய்ய வேண்டும்
நிறையையே நோக்கலாமே”
- இது அவள்
மேலும் சொல்கிறாள்…
“நிறையைக் காணக் காண
நிறையே நிறையும்”….என்றும் !
“எதைக் கண்டுகொள்கிறோமோ
அதுவே வளரும்”…என்றும் !!
மனைவியின் ஞானம் என்பதால்
மறுதலித்து விடுவதா என்ன ?
மனையிலேயே போதிமரம் ஒன்று இருப்பதை
உணர்ந்து விட வாய்த்துவிட்டால்
வனவாசம் போகவேண்டி இருக்காது போலும் !
-ம.திருவள்ளுவர்