" இந்த சம்மந்தத்தை எப்படியாவது முடிச்சிடனும் கமலா..." மூர்த்தி தன் மனைவியிடம் சொல்ல
"அப்படின்னா நல்ல நாள் பார்த்து
பையன வர சொல்லி பொண்ண பாத்துட்டு வந்துடுவோம்... " மனைவியும் ஒத்துக்கொண்டாள்.
தன் ஒரே மகன் ரகுவிற்கு வரன்
பார்ப்பது பற்றிதான் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு வழியாக பெண் பார்க்க நாளும் குறித்து விட்டனர். அப்பா போன் போட்டு சொன்னதின் பேரில் ரகு வும் லீவில் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்து விட்டான்.
தாய்மாமன் உள்பட நெருங்கிய
உறவினர்களோடு பெண் பார்க்க மதுரைக்கு கிளம்பினர்.
பெண்ணை பார்த்தவுடன் மாப்பிள்ளை உள்பட அனைவர்க்கும் பிடித்துவிட்டது.
" அப்புறம் என்ன மேற்கொண்டு ஆக வேண்டியதை பேசி முடிச்சிடுவோம்..."
பெண் வீட்டுகார பங்காளி ஒருவர்
ஆரம்பிக்க, இரு வீட்டாரும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய
'பார்மாலிடி'யை பற்றி பேசிக்
கொண்டிருந்தனர்.
"ஏங்க தம்பி...உங்ககிட்ட தனியா பேசணும்னு பொண்ணு சுமிதா ஆசைப்படுறா..."பொண்ணுடைய அத்தை ரகு விடம் சொல்ல,பொண்ணும் பையனும் மாடிக்கு சென்றனர்
" மிஸ்ட்டர் ரகு...இது உங்களுக்கே நல்லாயிருக்கா...பழகுறது ஒரு பொண்ணு
கூட ...கல்யாணம் பண்ணிக்கப்போறது
என்னையா...? கேட்டா நட்புன்னு சொல்லுவீங்க... அநாகரீகமாக நடந்துப்பீங்க... ஆண் பெண் நட்புக்குறது
கண்ணியமா நடந்துகொள்வது தான். உணர்ச்சிக்காக பழகுறது இல்ல... சென்னைலிருந்து நீங்க வந்த 'பஸ்'ல தான் நானும் வந்தன்... நீங்களும் ஒரு பொண்ணும் ஜாலியா பேசிக்கிட்டு அநாகரீகமாய் நடந்துகிட்டத பாத்துகிட்டுத்தான் இருந்தேன்... அந்த
பொண்ணு சொன்னாளே...'நீங்க
வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட என்ன மறந்துடாத
ரகு...நாம எப்போதும்போல தனியா சந்திக்கணும் ஜாலியா இருக்கணும்...'
அதையும் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன்...
இதுவே என் இடத்துல நீங்க இருந்தா இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பீங்களா...?
இப்பவே உங்கள பத்தின உண்மைய சொல்லி உங்கல வேணான்னு மறுத்துடலாம்... உங்க அப்பா அம்மாவுக்காக அவங்க நல்ல மனசுக்காக.
அத நான் செய்யமாட்டேன்...அந்த பொண்ண மறந்துட்டு நீங்க மாறிடுவீங்க என்ற நம்பிக்கையில உங்கள ஏத்துக்குறன்." சுமிதா சொன்னவுடன்,
"என் தப்ப நான் உணர்ந்துட்டேன்...
என்ன மன்னிச்சிடுங்க சுமி..." ரகு கை கூப்பி கேட்டுக்கொண்டான்.
சுகபாலா
திருச்சி