tamilnadu epaper

உண்மைக் காதல்

உண்மைக் காதல்


தாத்தாவின் அறையில் நுழைந்த சித்ராவுக்கு நாற்காலியும், புத்தக அலமாரியில் உள்ள புத்தகங்களும் அவரில்லாது வெறுமையில் தவிப்பதைப் போல தோன்றியது. அவர் தன் வேலை எல்லாம் முடித்து மதியத்தில் கூட சிறிதுநேரம் தூங்காது புத்தகம் படிப்பவரை சித்ராவின் தம்பி "தாத்தா நீ என்ன பரீட்சை எழுதப் போறயா" என கிண்டல் செய்வான். 


"ஆமாண்டா நீங்கலாம் படிக்கணும்னுதான் வாங்கிப் போடறேன் ஆனா யாரும் எடுத்து படிக்க மாடடேங்கறீங்க" என தன் ஆதங்கத்தைச் சொல்வார். தாத்தாவின் புத்தக சேமிப்பில் சாதிமத பேதமின்றி பகவத் கீதை திருக்குரான், பைபிள் தவிர மார்கீசிய கம்யூனிஸ சித்தாதங்கள், கவிதைகள், தமிழ் ஆங்கில நாவல்கள், திரு.கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம், சங்க இலக்கியங்கள், சிந்து சமவெளி நாகரிகம் , ஆன்மீக அறிஞர்கள் பற்றி இப்படி பலதரப்பட்ட புத்தகங்கள் உண்டு.


அவர் வாழ்நாள் 84 ஆண்டுகள் ,  இறுதிவரை புத்தகத்தோடு அவர் கொண்ட  ஈடுபாடு சிறிதும் குறையாதது கண்டு ஆச்சர்யமுற்ற நாட்கள் அவை. சித்ராவுக்கு 

அந்த புத்தகங்களை தொடும் போது தாத்தாவின் கைகளைப் பிடிப்பது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது.


எதிர்கால சந்ததியை அறிவுசார்ந்த சமூகமாக நல்லபடியாக வளர்க்கப்பட வேண்டும் என்ற தாத்தாவின் தொலைநோக்குப் பார்வை சித்ராவிற்கு

வியப்பைத் தந்தது.


இனி , புத்தகங்களை நான் படிப்பது மட்டுமல்ல தம்பி , மற்றும் தன்னை சுற்றி உள்ளவர்கள் படிப்பதற்கும் தன்னால் முடிந்த உதவிகள் செய்ய வேண்டும் என முடிவெடுத்தாள் சித்ரா. இருந்து சாதிக்க முடியாததை இறந்து சாதித்த தாத்தாவின்

புத்தகக் காதலே உண்மைக் காதல் என உணர்ந்தாள் சித்ரா.


 "இருக்கும் போது யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை" எனச் சொல்வதைப் போல புகைப்படத்தில் தாத்தா புன்னகைத்தார்.



-நா.பத்மாவதி

கொரட்டூர்