சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பல சிறப்புகளை சுற்றுலா தலங்களையும் தன்னகத்தைக் கொண்டது.
காரை செடிகள் மிகுந்து இருந்த இந்த பகுதியை அழித்து மக்கள் வாழும் ஊராக மாற்றியதால் காரைக்குடி என பெயர் பெற்றதாக கூறுகின்றனர். காரை வீடு என்று சொல்லக்கூடிய செட்டியார்களின் செட்டிய வீடுகள் மிகவும் அதிகம் .அதனால் காரைக்குடில் என்று அழைக்கப்பட்டு பின்னாளில் மருவி காரைக்குடி என மாறியதாகவும் சிலர் கூறுவர்.
காரைக்குடியாக இருந்ததை "கல்வி குடியாக" மாற்றியதை கேட்டாலே வள்ளல் அழகப்ப செட்டியார் பெயர்தான் நினைவுக்கு வரும் .இவர் ஆங்கில அரசு வழங்கிய "சர்"பட்டத்தை ஏற்க மறுத்தவர் .1957 ம் ஆண்டு இவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியது .1909ஆம் ஆண்டு முதல் 1957 வரை 48ஆண்டுகளே வாழ்ந்து ஒரு பல்கலைக்கழகத்தையே உருவாக்கியவர் .கல்வி நிலையங்கள் ,ஆராய்ச்சி கூடங்கள் கட்ட பல ஏக்கர் நிலத்தை வழங்கியவர்.
ஒரு முறை பாரதப் பிரதமர் நேரு அவர்கள் 15 லட்சம் ரூபாய் கொடுத்து இடம் கொடுத்தால் அந்த ஊருக்கு ஆராய்ச்சி கூட உண்டு என அறிவித்தார் .அப்போது ஒரு கோடி ரூபாய் கொடுத்து தன்னுடைய மாளிகையை கொடுத்தவர் வள்ளல் அழகப்ப செட்டியார். 1947 ஆம் ஆண்டில் வள்ளல் அழகப்பர் காரைக்குடியில் கல்லூரி ஒன்று அமைப்பதாக அரசிடம் உறுதி கொடுத்து தொடங்கினார் .தமிழ் துறைக்கு விரிவுரையாளர்கள் தான் உண்டு பேராசிரியர் என்ற அழகப்பர் நியமித்த பதவியே அறிவித்தது அரசு
ஆயிரம் ஜன்னல் வீடு:
காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் அரண்மனை செட்டிநாடு பாரம்பரிய கட்டிடக்கலையை பறைசாற்றி வருகிறது .பள்ளத்தூர் ஆத்தங்குடி பகுதிகளில் 100 ஆண்டுகளை கடந்தும் இன்னும் செட்டிநாடு பங்களாக்கள் பொலிவுடன் காட்சியளிப்பது பார்க்கவும் சுற்றுலா பயணிகளையே பிரமிக்க வைக்கிறது.
இந்த கட்டிடங்கள் சுண்ணாம்பு, கருப்பட்டி ,கடுக்காய் செக்கில் அரைத்து முட்டையின் வெள்ளை கருவை கலந்த கலவையை கொண்டு கட்டி உள்ளனர். இங்கு மின்விசிறியே இல்லாமல் குளுமையாக இருக்கும்.
இந்த செட்டிநாட்டு அரண்மனையை அண்ணாமலை பல்கலைக்கழகத்தை நிறுவிய ராஜா சார் அண்ணாமலை செட்டியாரால் 1912இல் கட்டப்பட்டது .பளிங்கு கற்களால்செய்யப்பட்ட பெரிய தூண்கள் நிரம்பிய ,அகன்ற தாழ்வாரம் கொண்டது .இங்கு இருக்கும் ஆயிரம் ஜன்னல் வீடுகள் புகழ்பெற்றதாக திகழ்கிறது.
காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மணி மண்டபம், கம்பன் மணி மண்டபம் பார்வையாளர்களை கவரக்கூடிய இடங்கள். காரைக்குடி கட்டிடக்கலை சிறப்பு கொண்டதோடு அல்லாமல் ஆன்மீக தலங்களையும் தன்னகத்தை கொண்டது. காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதன் திருக்கோவில் ,பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் ,அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில், சிறந்த ஆன்மீக தலங்களாக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது எனலாம்.
காரைக்குடி நகரில் மத்தியில் அமைந்திருக்கும் கொப்புடையம்மன் கோவில் காரைக்குடியின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறது.
காரைக்குடியில் நெய்யப்படும் கண்டாங்கி சேலைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல செட்டிநாட்டு உணவு வகைகள் இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் பிரசித்தி பெற்றதாக உள்ளது.
காரைக்குடி அருகில் உள்ள சிறுகூடல் பட்டி கவியரசர் கவிஞர் கண்ணதாசன் பிறந்த ஊராகும். அவர் பிறந்த ஊரிலேயே அவருக்கு கட்டப்பட்டுள்ள" கண்ணதாசன் மணி மண்டபம், சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் ஒன்றாகும்.
கட்டுரை எழுதியவர்:கவி-வெண்ணிலவன்,மணமேல்குடி.