எங்கள் ஊர் சதுரகிரி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள இயற்கையில் எழில் கொஞ்சம் ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயில் ஊருக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி, சந்தையூர் மலைப் பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இந்த மலைப் பகுதியானது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாகும். இந்த வனப்பகுதியானது கோரக்கர், சட்டைமுனி போன்ற சித்தர்கள் தவம் செய்வதற்காகவும் தத்துவ ஆராய்ச்சி செய்வதற்காகவும் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என அனுமானிக்கப்படுகிறது.இங்கு உள்ள இயற்கை எழிலும் நிசப்தமும் நமக்குள் ஆழமான அமைதியை உண்டாக்குகின்றன. இது தியானம் செய்யவும், மவுனம் மேற்கொள்ளவும் விரும்புகிறவர்களுக்கு உகந்த இடம் ஆகும். தமிழ் வருடம் ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் கூடி விரதமிருந்து நடைபயணம் மேற்கொண்டு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து மன அமைதியையும், தெய்வீக மேன்மையையும் கிடைக்கப் பெறுகிறார்கள்.
நாலாபுறமும் மலைகள் சூழ்ந்துள்ளதால் "சதுரகிரி" என எங்கள் ஊர் அழைக்கப்படுகிறது. ஒட்டு மொத்த மலைகளின் அமைப்பு, சதுர வடிவில் இருப்பதால் இப்பெயர் என்பதும் ஒரு கூற்று. சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மகாலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது இக்கோயிலின் சிறப்பு. இம்மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளதால் இதன் அருமைகளை உணர்ந்த பல சித்தர்கள் இங்கு தங்கி, தீராத நோயுள்ள மக்களுக்கு சித்த மருத்துவம் செய்து அருளியதாக வரலாறு கூறுகிறது. மேலும் சித்தர்கள் தவம் செய்வதற்காகவும் தத்துவ ஆராய்ச்சி செய்வதற்காகவும் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என நம்பப்படுகிறது.
மிகுந்த திகைப்பூட்டும் இந்த மலைகளில், இன்னமும்கூட சித்தர்கள் சிவபெருமானை வணங்கி வருவதாக நம்பப்படுகிறது.மலையில் வாழும் மலைவாழ் மக்கள் பளியர்கள் வழிபட்டு வந்து மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிகாலத்தில் சாப்டூர் பாளையக்காரராக இருந்த இராமகாடையா நாயக்கர் என்பவரால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் கோவில்கள் கட்டப்பட்டது. 1950 ஆம் ஆண்டு வரை இக்கோவில் சாப்டூர் பாளையக்காரர் பராமரிப்பில் இருந்து வந்தது. இம்மலை பகுதி 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை தினசரி இயக்கப்படும் பொதிகை அதிவிரைவு ரயில் மற்றும் கொல்லம் விரைவு ரயில் அல்லது வாரம் மூன்று முறை (புதன், வெள்ளி, சனி) ஆகிய கிழமைகளில் இயக்கப்படும் சிலம்பு அதிவிரைவு ரயிலில் திருவில்லிபுத்தூர் வரை பயணித்து பிறகு அங்கிருந்து பேருந்து மார்கமாக சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை சென்றடைந்து அங்கிருந்து
இருந்து மலை ஏறலாம். மதுரை பகுதிகளில் இருந்து திருவில்லிபுத்தூர்க்குப் பேருந்து வசதியுள்ளது. இங்கிருந்து வத்திராயிருப்புக்கு பேருந்து வசதிகள் உள்ளது. வத்திராயிருப்பிலிருந்து 10 கி.மி. தொலைவில் சதுரகிரி மகாலிங்கம் மலையின் அடிவாரமான தாணிப்பாறை உள்ளது. தாணிப்பாறையிலிருந்து மலையேறி, 7 கிமீ பயணித்து சுந்தரமகாலிங்கம் கோயிலை அடையலாம். தேனியிலிருந்து வருசநாடுக்குப் பேருந்து வசதியுள்ளது. (ஆடி அமாவாசை திருவிழா தினத்தன்று மட்டும் இந்த மலைப்பாதை பயன்படுத்தப்படுகிறது)