tamilnadu epaper

எங்கள் ஊர் சாயல்குடி சிறப்புகள்

எங்கள் ஊர் சாயல்குடி சிறப்புகள்

எங்கள் ஊர் சாயல்குடி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை நகரம் ஆகும்.சாயல்குடி பேரூராட்சி கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் அமைந்துள்ளது. இது இராமநாதபுரத்திலிருந்து 60 கிமீ தொலைவிலும், பரமக்குடியிலிருந்து 50 கிமீ தொலைவிலும் உள்ளது.இங்கு இருந்து 5 கிமீ தொலைவில் கடற்கரை உள்ளது.இது இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சாயல்குடி ஜமீன் ஆட்சி செய்த பகுதியாகும்.இங்கு உள்ள சிவன்கோவில் கடல்பாறையால் கட்டப்பட்டது. 

 

இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உருக்காலைகள் அமைந்திருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சங்க காலத்தைச் சேர்ந்த இரும்பாலைகளின் உருக்குலைந்த பகுதிகள் கிடைக்கப்பட்டுள்ளன. இரும்புத்தாது, உடைந்த பானையின் ஓடுகள், குறியீடுள்ள பானை ஓடுகள், சுடுமண்ணால் ஆன தாய்த் தெய்வ பொம்மை, கெண்டியின் மூக்குப்பகுதி என பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. உடமைக்குறி என நம்பப்படும் அடையாளங்களுடன் சில ஓடுகளும் கிடைத்துள்ளன 

 

சாயல்குடியில் சாந்தாரம் என்ற அமைப்பு, வட்டெழுத்து கல்வெட்டு ஆகிய சிறப்புகளைக் கொண்டதாக மிகப்பழமையான கைலாசநாதர்-மீனாட்சியம்பிகை கோயில் விளங்குகிறது. 

 

இந்த கோயிலில் சிவராத்திரியன்று கருவறையை நள்ளிரவில் பக்தர்கள் வலம் வந்து வழிபாடு செய்யும் நிகழ்வு நடக்கிறது. இந்நிகழ்வு தமிழகத்தில் எங்கும் நடக்காத முறை என கூறப்படுகிறது 

 

தொன்று தொட்டு நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்தவற்றை நாமும் தொடர்ந்து பாதுகாத்து அதை அடுத்த தலைமுறையினர் அறியச் செய்யவேண்டியது நம் கடமை. அவ்வகையில் உலகம் முழுவதும் உள்ள பாரம்பரியச் சிறப்பு கொண்ட கோயில்கள், கோட்டைகள், பண்பாட்டு நினைவுச் சின்னங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை யுனெஸ்கோ நிறுவனம் உலகம் முழுவதும் நடத்தி வருகிறது.

 

 

இதற்காக, “பாரம்பரியமும் காலநிலையும்” என்பது உருவாக்கப்பட்டுள்ளது. கலை, பண்பாடு, கல்வெட்டு, வரலாறு என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவை கோயில்கள். கோயில்களின் அமைப்பு, கல்வெட்டுகள், சிற்பங்கள் போன்றவை அக்காலங்களின் சிறப்புகளை உணர்த்தும். அவ்வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் தனிச் சிறப்பு கொண்டது சாயல்குடி கைலாசநாதர் கோயில். 

 

சாயல்குடி கண்மாய் கரையில் ராமநாதபுரம் செல்லும் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. லிங்கம் சதுர வடிவ ஆவுடையாருடன் உள்ளது. இங்கு முற்காலப் பாண்டிய மன்னன் மாறன் சடையனின் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. 

 

ராமநாதபுரம் மாவட்டத்திலேயே மிகப்பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ள சிவன் கோயில் இதுதான். இதில் இவ்வூரைச் சேர்ந்த கண்ணன் மணிமங்கலத்துக்கோன் என்பவரின் மகனான உலகசிந்தாமணிப்பேரரையன் அரையன் இளையபட்டாரன் இக்கோயிலில் விளக்கெரிக்க திருநொந்தா விளக்கையும், பதினைந்து ஆடுகளையும் நன்கொடையாக அளித்துள்ள தகவல் உள்ளது. 

 

மேலும் கல்வெட்டில் இவ்வூர் உலகசிந்தாமணி வளநாட்டு பிரம்மதேயமான சாகிஇல்குடி எனப்படுகிறது. சாகியில்குடி என்பது தற்போது சாயல்குடி என மருவியுள்ளது. சாகி என்பது ஒரு சிற்றீச்சை வகை தாவரமாகும். 

 

இதன் விமானம் சதுரவடிவில் சுத்த நாகரமாகவும், இரு தளங்கள் கொண்டதாகவும் உள்ளது. கோயில் கருவறையைச் சுற்றி ஒரு உள்திருச்சுற்று அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் எழும் சுவரும், உள்திருச்சுற்றின் சுவரும் மேலே செல்லும் போது ஒன்றாகிவிடும். 

 

இத்தகைய அமைப்பு கொண்ட விமானத்தை சாந்தார விமானம் என்பர். இவ்வமைப்பு காஞ்சி கைலாசநாதர், தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் கோயில்களில் உள்ளது. முற்காலப் பாண்டியர்களால் கட்டப்பட்ட சிறிய கோயில் எனினும் சாந்தாரம் இம்மாவட்டக் கோயில்களிலேயே இங்கு மட்டும் தான் காணப்படுவது குறிப்பிடத்தக்கது