திருவையாறு தஞ்சாவூரில் இருந்து 11 கிமீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருவையாறு என்ற பெயருக்கு ஐந்து ஆறுகள் என்று பொருள். இந்த ஆறுகள் அரிசிலாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி மற்றும் காவேரி.
இங்கு காவிரி நதியில் நீராடுவது மிகவும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.
இங்கு முதன்மையான தொழில் விவசாயம். நெல், வெற்றிலை கொடிக்கால், வாழை போன்றவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை, ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த ஐயாறப்பர் திருக்கோயில், கர்நாடக இசை மேதையும், சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜர் சமாதி, பூண்டி மாதா பேராலயம், அரசு இசைக் கல்லூரி போன்றவை உள்ளன.
*முக்தி கிடைக்கும் திருத்தலம்*
திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பதைப் போல், திருவையாறு மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற சிறப்பு கொண்டது இந்த திருத்தலம்.
ஐந்து பிரகாரங்கள் மற்றும் 7 நிலை ராஜகோபுரம் கொண்ட இந்த அற்புதமான திருவையாறு கோவில் 15 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. தஞ்சைப் பெரியகோயிலை விட மூன்று மடங்கு பெரியதாகும்.
மிகப் பழைமை வாய்ந்த *ஐயாறப்பர் கோயில்*- இல், ஐயாறப்பர் எழுந்தருளியுள்ள காவிரிக் கோட்டம் உள்ளது. தெற்கே தென் கயிலாயம், வட திசையில் வட கயிலாயம் என ஒரே இடத்தில் மூன்று சிவன் கோயில்கள் அமைந்துள்ளது மிகச்சிறப்பாகும். இதைச் சுற்றி பெரிய திருமதில்கள் உள்ளன.
ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று இரவில் 9 மணி அளவில் 'திருநாவுக்கரசர் திருக்கயிலை திருக்காட்சி' பெருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெறுகிறது. அன்று காலை முதல் இரவு முழுவதும் ஆலயத்தில் திருமறை பாராயணம் நடக்கிறது. இரவு முழுவதும் ஆலயம் திறந்திருக்கும். ஆடி அமாவாசையில் திருக்கயிலை காட்சி தந்தருளிய ஈசனை வழிபட்டு, இத்தல பைரவரையும் வழிபட்டால், முன்னோர்கள் அனைவரும் சிவபதம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
ஆடி அமாவாசை அன்று இரவில், இங்கு அப்பர் கயிலைக்காட்சி கண்டு வழிபாடு செய்வது திருக்கயிலை தரிசனத்துக்கு ஈடான பெரும் புண்ணிய பலனை அளிக்கும்.
*அசோகா அல்வா*
சுவையான காவேரி தண்ணீரும், எப்போதும் இசையோடு வீசும் காற்றும் திருவையாறின் இன்னொரு சிறப்பு. தியாகராஜ ஆராதனை விழா எவ்வளவு பிரபலமோ, அதே அளவு இன்னொரு பிரபலமான விஷயமும் இங்கு உண்டு. அதுதான் திருவையாற்றில் மட்டுமே கிடைக்கும் அசோகா அல்வா.
நெல்லை அல்வாவுக்கும் திருவையாறு அசோகா அல்வாவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நெல்லை அல்வா கோதுமையிலும், அசோகா அல்வா பாசிப்பருப்பிலும் செய்யப்படுகிறது. அசோகா அல்வாவில் நெய் சேர்க்கப்படுவதில்லை.மற்ற எல்லா அல்வா செய்முறையைக் காட்டிலும் அசோகா அல்வா செய்வது மிக மிக சுலபம். குறைவான பொருட்கள் மட்டுமே இதற்கு தேவைப்படுகிறது.
*சிலப்பதிகாரத்தில் திருவையாறு*
அந்நாளில் பூம்புகாரிலிருந்து கண்ணகியுடன் பிழைப்பு நாடி மதுரைக்குச் சென்ற கோவலன், காவிரியின் வடகரையோடுதான் திருவரங்கம் சென்று அங்கு காவிரி நதியைக் கடந்து உறையூர் வந்து அங்கிருந்து மதுரைக்குச் சென்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. அப்படி அவர்கள் காவிரியின் வடகரையோடு சென்ற வழித்தடத்தில்தான் திருவையாறு அமைந்திருக்கிறது. அவர்கள் இந்தப் பாதையில் நடந்து செல்கையில் வழியெங்கும் வேதியர்கள் செய்யும் யாகங்களின் புகை மேக மண்டலங்களைப் போல எங்கும் பரவிக்கிடந்ததாக இளங்கோவடிகள் வர்ணிக்கிறார்.
*சப்தஸ்தானம்*
திருவையாற்றின் சிறப்புக்கு மகுடமாக விளங்குவது இங்கு நடைபெறும் "சப்தஸ்தானம்" என்று வழங்கும் ஏழூர் திருவிழாவாகும். திருவையாற்றைச் சுற்றிலும் அமைந்துள்ள ஏழு ஊர்கள், அதாவது திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய இவ்வேழூருக்கும் உலா வரும் சப்தஸ்தானத் திருவிழா சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் பிற சப்தஸ்தான பல்லக்குகள் அவரவர் தலங்களுக்குத் திரும்பும்.
*திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா*
கர்நாடக இசை மரபை உருவாக்கியவர்களில் தலைசிறந்தவரும், ராமபக்தருமான ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள் 1847 ஆம் ஆண்டு ஜன. 6-ம் தேதி சித்தி அடைந்தார். காவிரிக் கரையின் வட பகுதியில் அவருக்கு சமாதி அமைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தியாகராஜரின் நினைவு நாளில் அவரது சமாதியில் அவருடைய சீடர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். காலப்போக்கில் திருவையாறுக்கு செல்ல இயலாத சீடர்கள் தங்களது வீட்டிலேயே அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
தியாகராஜரின் சிஷ்யர்களான உமையாள்புரம் சகோதரர்களான கிருஷ்ண பாகவதர், சுந்தர பாகவதர் 1903 ஆம் ஆண்டில் திருவையாறுக்கு வந்தனர். அப்போது, பிருந்தாவனத்தை அடையாளம் காண்பதே சிரமமாக இருந்தது. சிலருடைய உதவியுடன் பிருந்தாவனம் புதுப்பிக்கப்பட்டது.
1940 ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவான ஸ்ரீ தியாகப்பிரம்ம மகோத்சவ சபாதான் இப்போதும் ஆராதனை நிகழ்ச்சிகளைத் திருவையாறில் நடத்தி வருகிறது.
தியாகராஜர் ஆராதனை விழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஐந்து நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
கடைசி நாள் மங்கள இசையை தொடர்ந்து, விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவர். காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும் இந்த நிகழ்வை தொலைக்காட்சிகளும் நேரலையில் ஒளிபரப்பும்.
திருவையாறுக்கு இசை ரசிகர்கள்தான் செல்லவேண்டும் என்ற எண்ணம் சிலரிடையே உண்டு. நேர்மாறாக, இசையே தெரியாமல், என்னவென்று தெரிந்துகொள்வதற்காகவே, அங்கே செல்லலாம். நாளெல்லாம் இசை காதில் விழுந்துகொண்டே இருப்பதனால் நம்மை அறியாமலேயே நாம் அந்த பாடல்முறைக்குப் பக்குவப்பட்டுவிடுவோம். தியாகராஜ சுவாமிகள்ளின் கீர்த்தனைகளில் புகழ்பெற்றவை அனைத்தும் பலமுறை நம் காதில் விழுந்து பழகிவிடுவதனால் பிற்பாடு பாட்டு கேட்பது எளிதாக ஆகிவிடுகிறது. ஒரு இசைநிகழ்ச்சியில் பாடலை அடையாளம் கண்டுகொள்வது ஒரு தொடக்கம். திருவையாறு நம்மை எளிதாக உள்ளே கொண்டுசெல்லும். காவேரியின் ஒரு சுழி போல.
கீதா ராஜா
சென்னை 41