புதுக்கோட்டை கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் சிறப்பு வாய்ந்தது.கொன்றை மரங்கள் அடர்ந்த இடமாக இருந்ததால் கொன்றையூர் என்றாகி தற்போது கொன்னையூர் என்று அழைக்கப்படுகிறது. இதுதான் எங்கள் குலதெய்வக் கோவில்.
புதுக்கோட்டையிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது இந்தக் கோவில். பொன்னமராவதியில் குளத்தூர் எனும் இடத்தில் குடிகொண்டு கருணை செய்கிறாள் உலகின் தாயான முத்துமாரியம்மா.
இதன் தலவரலாறு சுவாரஸ்யமானது.முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி கொன்றை மரங்களும் கற்றாழைச் செடிகளும் சூழ்ந்த வனமாகத் திகழ்ந்ததாம். பால்காரரான பெரியவர் ஒருவர், அதிகாலையில் எழுந்து, பால் கறந்து, தலையில் தூக்கிச் சென்று ஊருக்குள் சென்று விற்று வருவது வழக்கம். அந்தக் கால கட்டத்தில், ஊர் மக்களை பல விசித்திரமான நோய்கள் தாக்கின. இதனால், நிலத்தில் வேலை செய்ய ஆளே இல்லாமல் போனது. விதைத்தவையெல்லாம், நீர் பாய்ச்ச ஆளின்றி, வாடின; கருகின. மழையும் தப்பிவிட, குடிப்பதற்குக்கூட தண்ணீர் கஷ்டம் எனும் அளவுக்கு அடுத்தடுத்துத் பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்தன. அதனால் மக்கள் அனைவரும் உலகாளும் நாயகியை வேண்டினர். அவர்களின் நோய்கள் யாவும் குணமாகவேண்டும். மனமெல்லாம் குளிர்ந்து பூரிக்க வேண்டும். பூமி செழித்துத் தழைத்து அனைவருக்கும் வயிறார உணவு கிடைக்கவேண்டும் என யோசித்தவள், பூமிக்குள் புகுந்து கொண்டாள். பாலை எடுத்துக்கொண்டு, வழக்கம்போல் அந்தப் பெரியவர் வரும்போது, கொன்றை மரத்தின் வேர்களில் அவரது கால்கள் பட, தடுமாறினார். பால் மொத்தமும் கொட்டியது. மண்ணெல்லாம் பாலாயிற்று. எத்தனை கவனமாக நடந்துபோனாலும், இப்படித் தடுமாறுவதும், பால் கீழே மண்ணில் கொட்டி வீணாவதும் தினமும் தொடர்ந்தது. பெரியவர் கவலையானார். ஒருநாள், கோடரியால் அந்தக் கொன்றை மரத்தின் வேரை வெட்டினார். அப்படி வெட்டியதும் ரத்தமும் பாலுமாக வெளிப்பட, அதிர்ந்துபோனார் பெரியவர். விஷயம் தெரிந்து, ஊரே கூடியது. இன்னும் தோண்டிப் பார்க்க அழகிய விக்கிரகத் திருமேனியில் வெளிப்பட்டாள், தேவி . விக்கிரகத்தை பள்ளத்தில் இருந்து வெளியே எடுத்து , மேடான பகுதியில் வைத்தவுடன் பூமியும் மக்கள் மனங்களும் குளிரக் கடல் பெருகுவது போல் பெய்தது, கனமழை.கிணறுகளும் குளங்களும் ஊரணிகளும் நிரம்பின.பிறகு வரப்பு வழியே, வாய்க்கால் வழியே வயல்களுக்குச் சென்று, விதைகளைக் குளிரச் செய்தன. தேகத்தைத் துளைத்த மழையால், மக்களின் தோல் நோய்கள் யாவும் நீங்கின.
நம் ஊரைக் காக்க வந்த தாய் இவள் என்று மக்கள் கொன்னையூர்த் தாயைக் கொண்டாடத் தொடங்கினர். அன்று முதல் இன்று வரை தன்னைநாடி வரும் அனைவருக்கும் அருள்பாலித்துக் காக்கிறாள். கொன்னையூர் முத்துமாரியம்மா.
இந்தக் கோயிலின் தலவிருட்சமாக நெல்லிமரம் உள்ளது. குழந்தைப்பேறு வேண்டி இதில் தொட்டில் கட்டிப் போடுபவர்களுக்கு அந்தப் பேற்றை அருளிச் செய்கிறாள் உலகை ஆளும் முத்துமாரியம்மா.
இங்கு பங்குனி மாதத்தில் நடைபெறும் பதினைந்துநாள் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. இந்தத் திருவிழாவிற்குச் சுற்றியுள்ள பல ஊர்களிலிருந்தும் வரும் பக்தர்கள் அம்மனை வணங்கித் தங்களது வேண்டுதல்களையும், நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர்
பக்தர்கள் தாங்கள் நினைத்தது நிறைவேறியதும் கண்மலர், உருவபொம்மை, உப்பு, மிளகு, அமோகமாக விளைந்த நெல் என நேர்த்திக் கடனைச் செலுத்தி, வணங்குகின்றனர். மேலும், சந்தனம் மற்றும் பாலபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல், மாவிளக்கு நைவேத்தியம் படைத்தும், முடிகாணிக்கையும் செலுத்துகின்றனர்.
எளிய மக்களின் காவல் தெய்வம் இவள்.
ஆடி அமாவாசை, தமிழ் வருடப்பிறப்பு,பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கும் பங்குனித் திருவிழா, பூச்சொரிதல் திருவிழா ஆகியவை இங்கு நடைபெறுகின்ற விழாக்களாகும். காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை என்ற வகையில் மூன்று கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன. சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் வழிபடுகின்ற முக்கியக் கோயிலாக இது கருதப்படுகிறது. பங்குனித் திருவிழாவின் ஒரு பகுதியாக இங்கு நடைபெறுகின்ற நாடு செலுத்துதல் விழா சிறப்பானதாகும். அவ்விழாவின்போது அருகிலுள்ள அருகிலுள்ள நான்கு நாடுகளின் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கம்பு, ஈட்டி, பல்வேறு வேடத்தை அணிந்து தத்தம் ஊரில் இருந்து கால்நடையாக சென்று நாடுசெலுத்தி வழிபாடு செய்தனர். குறிப்பாக ஆலவயல் நாட்டைச் சேர்ந்தவர்கள் நேர்த்தி கடன்களுக்காக உடலில் சகதி பூசி வருவது தனிச்சிறப்பாகக் காணப்படுகிறது.
இப்போது சிறப்புக் கவனம் பெற்று வரும் இந்தக் கோவிலின் மூலவரான முத்து மாரியம்மன் பல்லாயிரக்கணக்கான மக்களின் மனதில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தோற்றுவித்து அவர்களை நெறிப்படுத்தும் சக்தியாக விளங்குகிறாள்.
தாயே உன் திருவடி சரணம்?
-கி.சரஸ்வதி,
94/A1,
பாப்பாயம்மாள் நகர்,
சாமுண்டி நகர் அருகில்,
திண்டல் போஸ்ட்,
ஈரோடு,
638012 .