சென்னை, ஜூன் 13
குவைத் நாட்டில் 6 மாடிகளைக் கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உட்பட 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். உயிரிழந்தவர்களில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ராமநாதபுரம், தஞ்சையை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. பலியானவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர இந்திய விமானம் குவைத் விரைந்துள்ளது.
குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கப் நகரத்தில் அமைந்துள்ள 6 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராடி தீயை அணைத்தனர்
இந்த பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 42 பேர் இந்தியர்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த 5 பேரும், கேரளாவை சேர்ந்த 19 பேரும் அடங்குவர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கியாஸ் சிலிண்டர் வெடித்தது
6 மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டை சேர்ந்தவர்களே அதிகம் தங்கியுள்ளனர். இந்த கட்டிடம் குவைத் நாட்டை சேர்ந்தவருக்கு சொந்தமானது. அடுக்குமாடி குடியிருப்பில் என்பிடிசி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் தங்கி இருந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். அவர்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள்.
அங்கு எகிப்து நாட்டு காவலாளி தங்கியிருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்தது தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடத்தின் கீழ்தளத்தில் அந்த காவலாளி தங்கியுள்ளார். அதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட நேரம் அதிகாலை 4 மணி என்பதால் பெரும்பாலானவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அதுவே உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் என தெரிகிறது. தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளனர். சிலர் தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்று எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளனர். தீவிபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
முதலமைச்சர்
ஸ்டாலின் ஆலோசனை
குவைத் தீவிபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பது தொடர்பாக முகாம் அலுவலகத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அயலக தமிழர் நலத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகளை குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
ராமு கருப்பணன், சின்னத்துரை கிருஷ்ணமூர்த்தி, வீராசாமி மாரியப்பன், முகமது ஷெரீப், புனாப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூரை சேர்ந்த ராமு கருப்பணன் அடுத்த மாதம் தமிழ்நாடு திரும்புவதாக இருந்தது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் அவர் மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் மட்டுமே கிடைத்தது. வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அவரது மகன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆதனூர் பகுதியை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய்யின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து முயன்றும் தொடர்பு கொள்ள முடியவில்லை, எந்த தகவலும் கிடைக்கவில்லை என குடும்பத்தினர் கவலையுடன் தெரிவித்தனர்.
அவசர உதவிக்கு தொலைபேசி எண்கள்
இந்த விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் +91 1800 309 3793 (இந்தியாவுக்குள்), +91 80 6900 9900, +91 80 6900 9901 (வெளிநாடு) கீழ்க்காணும் உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.ஏ. பரிசோதனை
இந்த தீ விபத்தில் பலியான இந்தியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டது. மேலும் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை உடனடியாக தாயகம் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.
இறந்த உடல்களை அடையாளம் காண்பதற்கு குவைத் அரசு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் மூலம் இறந்தவர்கள் உடல்களை விரைந்து அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குவைத்துக்கு விமானப்படை விமானம் விரைகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர்
குவைத் விரைந்தார்
குவைத் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர பிரதமர் மோடி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். வெளியுறுவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவிகளை மேற்பார்வையிடவும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதை உறுதி செய்யவும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் குவைத் சென்றார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
உயிரிழந்தவர்களின் உடலை தாயகம் கொண்டு டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் குவைத்துக்கு சென்றது. ஒரே விமானத்தில் உயிரிழந்த இந்தியர்கள் அனைவரின் உடல்களையும் கொண்டு வரும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து தீ விபத்தில் தொடர்புடைய இந்தியர்களின் குடும்பத்தினருக்காக 965 65505246 என்ற ஹெல்ப்லைன் எண்ணை குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது.