டெல்லி ஓட்டலில் பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு மாதத்துக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். முதலில் மகாராஷ்டிராவில் தங்கியிருந்த அவர், சில தினங்களுக்கு முன்பு கோவாவுக்கு சென்றுள்ளார். கடந்த செவ்வாக்கிழமை இரவு டெல்லிக்கு சென்றுள்ளார். மஹிபால்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவருக்கு தூய்மைப் பணியாளர் லிப்டில் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை கைலாஷ் (24) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அவர் காவல் துறையில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து தென்மேற்கு டெல்லி காவல் துணை ஆணையர் சுரேந்திர சவுத்ரி கூறும்போது, “பிரிட்டன் பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 2 தனித்தனி வழக்குகள் பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் இருவருக்கும் தொடர்பு இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில், கைலாஷ் என்பவர் அந்தப் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி உள்ளார். இந்நிலையில், நட்பை துண்டித்துக் கொண்ட கைலாஷை சந்திப்பதற்காக அந்தப் பெண் டெல்லி வந்துள்ளார். இந்த நிலையில்தான் கைலாஷ் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவருடைய செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்து வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக பிரிட்டன் தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.