tamilnadu epaper

திருவாசகம்_எழுதப்பட்ட_நாள்

திருவாசகம்_எழுதப்பட்ட_நாள்

தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

 

 வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய திருவாசகத்தை ஒரு முறைசொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

 

 மாணிக்க வாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார். எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்வைத்து விட்டு மறைந்து விட்டார். 

 

மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர். ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில்"மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப்பட்டிருந்தது.

 

 மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள். ஓலைச் சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும்பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் "ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி, வந்தது பெருமான்தான் என தெரிந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார். தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச் சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர். மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி "இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள்" என்றார். அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.ஆனி_மகம் மாணிக்கவாசகரின் குரு பூஜை நாள் ஆகும்*

 

*நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது. சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும். அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும். அடுத்த 8 வரிகள் போற்றி என முடியும். இவ்வாறு 6-5-8 எனஅமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார். 

 

இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும். திருவாசகத்தின் 18 வது வரியான அவன்_அருளாலே_அவன்_தாள்_வணங்கி என்பதுபடிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்*

 

*ஓம் நமச்சிவாய* 

 

ஆர்.சுந்தரராஜன்,

சிதம்பரம்-608001.