துணிந்துவிட்டாள் துளசி.
அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லை.
வற்றிய மார்பில் பால் குடிக்க வழியில்லாமல் பசியில் அழும் கைக்குழந்தை.
உதவிசெய்ய உறவினர்களோ நண்பர்களோ யாரும் இல்லை அவளுக்கு.
எத்தனை நாட்கள்தான் பசியோடும் அழுகையோடும் வாழ்க்கையை ஓட்டுவது?
கணவன் கூலி வேலை செய்து சம்பாதிக்கும் பணம் அவனுக்கு குடித்துக் கும்மாளம் அடிக்கவே போதவில்லை.
தனக்கு மனைவியும் குழந்தையும் இருப்பதை அவன் எப்போதோ மறந்து போய்விட்டான்.
இப்போது பசியால் அழும் குழந்தையின் பசியைப் போக்க எதுவும் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் துளசி.
தான் செய்யப் போகும் செயல் தவறானது என தெரிந்தும் மனதைத் தேற்றிக்கொண்டு முடிவெடுத்துவிட்டாள்.
ஆபத்துக்குப் பாவம் இல்லை.
வெளியில் தெரியாமல் விஷயத்தை முடிக்க வேண்டும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
குடிசையின் கதவைச் சாத்தினாள்.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேகவேகமாக நடந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தவாறு அடகுக் கடைக்குள் நுழைந்தாள்- தாலியை அடகு வைக்க!
*-ரிஷிவந்தியா,*
*தஞ்சாவூர்.*