திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், ஹயாத் நகர், ரவி நாராயண ரெட்டி காலனியில் 300-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட தீ காற்றின் வேகம் காரணமாக மள மளவென அருகிலுள்ள குடிசை வீடுகளுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, நகை பணம் எரிந்து சாம்பலானது. குடிசையில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 300-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசமானது. ஏழைகளின் குடிசை வீடுகள் எரிந்து நாசமானதால் அவர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகினர்.