பண்பொன்றே உனை ஏற்றும் ஏணி
இதை அறிய செவி சாய்ப்பாய் வா நீ
பண்போடு உன் வாழ்வை நடத்து
பரிவோடு அனைவரையும் அரவணைத்து
நேயத்தை நேசித்தால் அதுவன்றோ குணம்
மனிதத்தைப் பூசித்தால் அதுவன்றோ மனம்
மாற்றானுக்கு மனம் இரங்கினால் அதுவன்றோ அன்பு
மண்ணோடு புதைத்தாலும் மணக்க வேண்டும் பண்பு
தீய எண்ணங்களை அடியோடு நீக்கி
தரும சிந்தனைகளை வாழ்வோடு ஆக்கி
தன்னலத்தை துளியும் இல்லாமல் போக்கி
பிறர் போற்ற வாழ்வதுவே பண்பெனும் ஊக்கி
உடன் பிறந்தவராய் அனைவரையும் அணைத்து
நல்ல இதயத்தால் அனைவரையும் இணைத்து
நீங்காத நல்லொழுக்கத்தினை நினைத்து
வாழ்வில் வீறுநடை போடு பண்பினைப் படைத்து
அகிலத்தை அள்ள வேண்டும் அன்பு
மரணத்தை வெல்ல வேண்டும் பண்பு
பண்பைத்தான் பாராட்டும் உலகு
தீயது இருந்தால் அதைவிட்டு நீ விலகு
உன் வாழ்வை அர்த்தப்படுத்துவதே இது
இதை விடுத்தால் புகழ் சேர்ப்பது எது
பரிவோடும் பாசத்தோடும் எல்லோரிடமும் பழகு
உழைப்போடும் கடமையோடும் ஓயாமல் ஒழுகு !
-கவிஞர் மு.வா.பாலாஜி
ஓசூர்.