புதுச்சேரி, மே 29
முகக் கவசம் அணிவதா, வேண்டாமா என்பது பற்றி மாநில அரசுகளே தீர்மானிக்கலாம் என மத்திய அமைச்சர்கூறினார்.
புதுச்சேரியில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. மத்திய அரசும் அதை அறிவுறுத்தவில்லை. கொரோனா பரவல் நிலைக்கு ஏற்ப மாநில அரசுகளே முகக்கவசம் அணிவது குறித்த முடிவுகளைத் தீர்மானிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பிரதாப்ராவ், “யோக கலை உடற்பயிற்சி மட்டுமல்ல, உடல், மனம், ஆன்மாவை ஒன்றிணைக்கிறது. யோகா செய்தால் அமைதி, தூய்மை, சக்தி, பலம் ஆகியவை கிடைக்கும். மன அழுத்தத்துக்கான சரியான தீர்வாக யோகா அமைந்துள்ளது. மருந்து இல்லாமல் இயற்கை வழியில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ யோகா உதவும் “ என்றார்.தொடர்ந்து, காந்தி சிலை முன் தரையில் அமர்ந்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், மத்திய இணை அமைச்சர் பிரதாப்ராவ் யாதவ், பேரவைத் தலைவர் செல்வம், தலைமைச் செயலர் சரத்சவுகான் உள்ளிட்டோர் யோக பயிற்சி மேற்கொண்டனர். இதில் குழந்தைகள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டனர்.