tamilnadu epaper

மத்திய வக்பு இணையதளத்தில் பதிவு செய்யப்படாத சொத்துகள் சேர்க்கப்படாது: அரசு வட்டாரங்கள் தகவல்

மத்திய வக்பு இணையதளத்தில் பதிவு செய்யப்படாத சொத்துகள் சேர்க்கப்படாது: அரசு வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி:

விரைவில் தொடங்கப்பட உள்ள மத்திய வக்பு போர்ட்டலின் தரவுத் தளத்தில் பதிவு செய்யப்படாத வக்பு சொத்துகள் விலக்கி வைக்கப்படும். இவை மத்திய தரவுத் தளத்தில் சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவு தளம், “ தயாரிப்பு-சரிபார்ப்பு-அனுமதி" ஆகிய மூன்று அடுக்கு சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பை உள்ளடக்கியதாக இருக்கும்.


இந்த போர்ட்டல் வரும் ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போர்ட்டல் தற்போதைய வக்பு தரவு களஞ்சியமான இந்திய வக்பு சொத்து மேலாண்மை (டபிள்யூஏஎம்எஸ்ஐ) அமைப்புக்கு மாற்றாக இருக்கும்.


இந்திய வக்பு சொத்து மேலாண்மை அமைப்பில் பதிவு செய்துள்ள அனைவரும் தற்போது உருவாக்கப்படும் மத்திய வக்பு போர்ட்டலில் புதிதாக பதிவு செய்ய வேண்டும் என்று சிறுபான்மை விவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


புதிய செயல்முறையின்படி கவனிப்பாளர் (முத்தவல்லி) சொத்து விவரங்களை பதிவிட்டு தயாரிப்பாளராக பணியாற்றுவார். வக்பு வாரிய அதிகாரிகள் அதனை சரிபார்ப்பவராக செயல்படுவர். இறுதியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி அனுமதிப்பவராக செயல்படுவார். பதிவுகள் இறுதி செய்யப்படுவதற்கு முன்பாக அந்த அதிகாரி சொத்துகளுக்கான முழு சரிபார்ப்பை உறுதி செய்வார்.


பதிவு செய்யப்படாத மற்றும் இந்த மூன்று அடுக்கு சரிபார்ப்பில் தகுதி பெறாத அனைவரும் போர்ட்டலில் இணைய பதிவு முறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.


போர்ட்டலின் அம்சங்கள் குறித்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதன்மை பயிற்சியாளர் குழுவுக்கு வழங்கப்பட்ட பயிற்சி அமர்வுக்குப் பிறகு சிறுபான்மை விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ இந்த கட்டமைப்பு செயல்முறை முரண்பாடுகளை கணிசமாகக் குறைக்கும், வக்பு சொத்து பதிவு மற்றும் கண்காணிப்பில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும்" என்று தெரிவித்துள்ளது.


மாநிலங்கள் சிறுபான்மை அமைச்சகத்துடன் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி நாட்டில் 8.7 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் வக்பு சொத்துகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 4.2 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் முறையான ஆவணங்கள் இன்றி வக்பு சொத்துகளாக நீண்டாக காலமாக இருந்துவருகின்றன. வக்பு சொத்துகள் நாடு முழுவதும் 39 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விரவிக்கிடக்கின்றன.