ஏடிஎம் வேனில் ரூ.7.11 கோடி கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிய பெங்களூரு போலீஸார்
பெங்களூரு: ஏடிஎம் பணம் நிரப்பும் வேனில் இருந்து ரூ.7.11 கோடி கொள்ளையடித்த மர்ம நபர்களை தனிப்படை போலீஸார் நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் உள்ள ஜே.பி. நகரில் எச்டிஎஃப்சி வங்கி கிளையில் இருந்து நேற்று முன் தினம் பணம் ஏற்றிக்கொண்டு சிஎம்எஸ் நிறுவனத்தின் வேன் ஜெயநகர் அசோகா தூண் அருகே சென்றது. அப்போது இன்னோவா வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அதனை வழிமறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளை போல நடித்து ரூ.7.11 கோடியை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து சித்தாபுரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 4 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையில் நன்கு விஷயம் அறிந்த உள்வட்ட ஆட்கள் ஈடுபட்டுள்ளார்களா? எதற்காக கொள்ளையடிக்கப்பட்ட விஷயத்தை போலீஸில் தாமதமாக புகார் அளித்தார்கள்? வேனில் இருந்த துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் கொள்ளை சம்பவத்தின்போது ஏன் ஆயுதத்தை பயன்படுத்தவில்லை? வெளிமாநிலத்துக்கு கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனரா என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
4 பேரிடம் விசாரணை: பணம் கொள்ளையடிக்கப்பட்டபோது சிஎம்எஸ் வேனில் இருந்த வங்கி ஊழியர் தம்மையா, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் ராஜண்ணா, ஓட்டுநர் வினோத், காவலர் அஃப்தாப் ஆகிய 4 பேரிடமும் தனிப்படை போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
மேலும் நால்வரின் சமூக வலைதள கணக்குகள், செல்போன், கணினி ஆகியவற்றை ஆராய்ந்து வருகின்றனர். செல்போன் எண்களுக்கு வந்த அழைப்புகள், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை ஆராய்ந்தனர்.
இதுதவிர ஜே.பி. நகரில் இருந்து டைரி சர்க்கிள் வரையிலான சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆராய்ந்தனர். குறிப்பாக சம்பவம் நிகழ்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்து கொள்ளை அடிப்பதற்கான திட்டமிடல் ஏதேனும் நிகழ்த்தப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது சந்தேகத்துக்குரிய 4 பேர், குறிப்பிட்ட சாலையில் அடிக்கடி வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்கள் சம்பந்தமான சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து வங்கி மற்றும் ஏடிஎம் பணம் நிரப்பும் வேனின் ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த நால்வரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறுகையில், “போலீஸாருக்கு குற்றவாளிகள் தொடர்பான முக்கிய துப்புகள் கிடைத்துள்ளன. அதனை வைத்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய போலீஸார் முயன்று வருகின்றனர். பெங்களூரு முழுவதும் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகா மட்டுமல்லாமல் ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.