சரக்கு ஆட்டோவில் ரேசன் அரிசி கடத்தியவர் கைது: வாகனம் பறிமுதல்
Jan 12 2026
70
தஞ்சாவூர், ஜன.- தஞ்சை மாவட்டம் திருவோணம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக, தஞ்சை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ஜெகதீசன், உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருவோணம் 3 ரோடு சந்திப்பு பகுதியில், தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அப்போது, அதில் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 13 மூட்டைகளில் 650 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகளையும், அதனை கடத்தி வந்த தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த நரங்கியன்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவோணம், மேட்டுப்பட்டி, தோப்பு விடுதி உள்ளிட்ட பகுதிகளில் ரேசன் அரிசி குறைந்த விலைக்கு வாங்கி, இட்லி மாவு அரைத்து விற்பனைக்கு பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட பாலசுப்ரமணியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?