தஞ்சாவூரில் முன்னாள் எம்.பி ஏகேஎஸ் விஜயன் வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு!
தஞ்சை: தஞ்சாவூரில் முன்னாள் எம்.பி.யும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏகேஎஸ் விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் சித்தமல்லியைச் சேர்ந்தவர் ஏகேஎஸ் விஜயன். நாகை மக்களவைத் தொகுதியில் 1999, 2004, 2009 தேர்தல்களில் போட்டியிட்டு வென்றவர். தற்போது திமுகவில் விவசாய அணி மாநிலச் செயலாளராகவும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் உள்ளார். இவருக்கு, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சேகரன் நகரில் வீடு உள்ளது. இந்த வீட்டில் விஜயனின் மனைவியும், மகளும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நவ.28-ம் தேதி விஜயனின் மனைவி ஜோதிமணி தனது மகளுடன் சித்தமல்லிக்குச் சென்றுவிட்டு இன்று காலை தஞ்சாவூர் திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 87 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஏகேஎஸ் விஜயன் அளித்த தகவலின் பேரில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தகவலறிந்து மாவட்ட எஸ்.பி. ஆர்.ராஜாராம், வீட்டைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நகைகளை திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?