நீலகிரியில் 104 பேருக்கு வன உரிமைக்கான ஆவணங்கள்: ஆ.ராசா எம்.பி. வழங்கினார்
Sep 25 2025
26

நீலகிரி, செப். 23–
நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 104 பேருக்கு ரூ.16.44 லட்சம் மதிப்பில் வன உரிமை ஆவணங்களும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அரசு தலைமைக்கொறடா கா.ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதாவது:–
“நீலகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சுமார் 51 ஏக்கர் நிலத்திற்கு வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டுள்ளது. வனத்தை காக்கும் உழைப்புக்கு உரிய நலன்கள் கிடைக்க தமிழக அரசு தேன், மிளகு, மசாலா போன்ற உற்பத்திகளுக்குத் துணை நிதி வழங்கி வருகிறது. மேலும், குழந்தைகள் பள்ளி, கல்லூரி கல்வி கற்க பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
யானை கண்காணிப்புக்கு ஏஐ கேமரா
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூடலூர் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய 12 புதிய கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே 54 முன்னெச்சரிக்கை கருவிகள் உள்ளன. கூடுதலாக பணியாளர்கள், ரோந்து வாகனங்கள் நியமிக்கப்படும். வனத்துறை பணியிடங்கள் விரைவில் முழுமையாக நிரப்பப்படும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், முதன்மை வன பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா, கள இயக்குநர் (முதுமலை புலிகள் காப்பகம்) கிருபாகரன், மாவட்ட வன அலுவலர் (நீலகிரி கோட்டம்) கௌதம், வெங்கடேஷ் பிரபு (கூடலூர்), துணை இயக்குநர்கள் (முதுமலை புலிகள் காப்பகம்) கணேசன், வித்யாதர், உதகை வருவாய் கோட்டாட்சியர் டினு அரவிந்த், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?